கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பிற்பகல் 3 மணி நிலவரப்படி 52.03% வாக்குகள் பதிவாகியுள்ளன.
கர்நாடகாவில் இன்று சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மே 13 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 113 இடங்களை பிடிக்கும் கட்சியே ஆட்சியை பிடிக்கும். தேர்தல் நெருங்கிய நிலையில் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டன. கடந்த 8ம் தேதியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவுபெற்றது.
இந்த தேர்தலில் 224 சட்டப்பேரவை தொகுதிகளில் 2 ஆயிரத்து 615 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பாஜக சார்பில் 224 வேட்பாளர்களும், காங்கிரஸ் சார்பில் 223 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். மேலும் மதசார்பற்ற ஜனதாதளம் சார்பில் 209 வேட்பாளர்களும், ஆம் ஆத்மியில் 209 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் சுயேட்சை வேட்பாளர்களாக 918 பேர் களத்தில் உள்ளனர்.
இதையும் படியுங்கள் : பிரபல கே-பாப் இசைக்குழுவில் இருந்து ராப் பாடகர் லூகாஸ் விலகல் – ரசிகர்கள் அதிர்ச்சி!!
இதனைத் தொடர்ந்து இன்று காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவை முன்னிட்டு தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் தீவிரப்படுத்தினர். தேர்தலில் வாக்களிக்க மக்கள் ஆர்வமுடன் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். மொத்தம் 58 ஆயிரத்து 545 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 52.03% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.








