தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளையொட்டி, அவரை நினைவுகூர்ந்து பிரதமர் மோடி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.
பெருந்தலைவர் காமராஜரின் 120ஆவது பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் இன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், காமராஜரின் பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், திரு.காமராஜர் அவர்களை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மறக்கவொண்ணா பங்களிப்பு செய்தவர். கனிவும் அக்கறையும் கொண்ட சிறந்த நிர்வாகி. ஏழ்மையை ஒழிக்க மக்களின் துயரைப் போக்க கடினமாக உழைத்தவர். சுகாதாரம், கல்வியை மேம்படுத்த கவனம் செலுத்தியவர் எனப் பதிவிட்டுள்ளார்.
https://twitter.com/narendramodi/status/1547797728109170689?t=R9jdQNMmIREBM5PPuYmuPg&s=08
இதேபோல, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் தனது ட்விட்டர் பக்கத்தில், பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாள் எனத் தலைவர் கலைஞர் அறிவித்ததே, நாம் கல்வி பெற்றிட அவர் முன்னெடுத்த திட்டங்களைத் தலைமுறைகள் தாண்டியும் எடுத்துக்கூறும். போராடிப் பெற்ற கல்வி உரிமையால், அறிவார்ந்த நற்சமுதாயமாய் விளங்கிடுவோம். கல்வியும் மருத்துவமும் நமது அரசின் இரண்டு கண்கள். தரமான கல்வியும், மருத்துவமும் அனைவருக்கும் கிடைத்திடும் வகையில் நாம் செயல்படுத்தி வரும் திட்டங்களை இன்னும் செம்மைப்படுத்திடப் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளில் உறுதிகொள்வோம் எனப் பதிவிட்டுள்ளார்.
https://twitter.com/mkstalin/status/1547774786532548608?s=21&t=IEOTm-joGKUe4yFKXNYjXQ
-ம.பவித்ரா







