சக வேட்பாளர்களுக்கு மநீம தலைவர் கமல்ஹாசன் மடல்

கோவை தெற்குப் பகுதியில் போட்டியிடும் மநீம தலைவர் கமல்ஹாசன் சக போட்டியாளர்களுக்கு மடல் ஒன்றை எழுதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த மடலில், “மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக கோவை தெற்குத்…

கோவை தெற்குப் பகுதியில் போட்டியிடும் மநீம தலைவர் கமல்ஹாசன் சக போட்டியாளர்களுக்கு மடல் ஒன்றை எழுதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த மடலில், “மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் கமல் ஹாசனின் அன்பு வணக்கம். தேர்தல் என்பது போர்க்களம் அல்ல. அது இரு அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியும் அல்ல. வெற்றி அல்லது தோல்வி ஆகிய இரு முனைகளை மட்டுமே தேர்தலின் முடிவு என கருதிக்கொள்ள கூடாது என நான் என் சகாக்களிடம் அடிக்கடி குறிப்பிடுவேன் என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கோயம்புத்தூர் தெற்குத் தொகுதியில் நடைபெற இருக்கும் தேர்தல் நேர்மையாகவும், வெளிப்படையாகவும், அமைதியாகவும் நிகழ வேண்டுமென விரும்புகிறேன். யார் வென்றால் தனக்கு நல்லது என மக்கள் நினைக்கிறார்களோ, அவர்கள் வெல்லட்டும். நம்மில் யார் வென்றாலும் கோவை தெற்குத் தொகுதி மக்கள் வென்றதாகவே பொருள்.

எல்லோரும் மக்கள் பணி செய்யவே வந்திருக்கிறோம். வென்றவரோடு போட்டியிட்ட அனைவரும் தோள் கொடுத்தால் அது மிகப்பெரிய ஜனநாயகப் பண்பாடாக அமையும் என்பதில்ஐயமில்லை. இந்தத் தேர்தல் ஜனநாயக முறைப்படி நேர்மையாக நிகழ்ந்தேற நாம் அனைவருமே ஒத்துழைக்க வேண்டும்.

ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்தை நோக்கிய முன்னகர்வில் கோவை தெற்கு இந்தியாவிற்கு வழிகாட்ட வேண்டுமென விரும்புகிறேன். உங்களுக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.