கள்ளக்குறிச்சி கலவரத்தின்போது, எந்தெந்த ஹேண்டில்களில் இருந்து தவறான தகவல்கள் பரப்பட்டது என விவரங்கள் கேட்டு மாவட்ட காவல்துறை டிவிட்டர் நிறுவனத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தனியார் பள்ளியில் கடந்த 13-ம் தேதி ஸ்ரீமதி என்ற மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக போராட்டம் வெடித்தது. இந்த போராட்டம் கடந்த 17-ம் தேதி வன்முறையாக மாறியது.
அப்போது, உயிரிழந்த மாணவியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சம்மந்தப்பட்ட பள்ளியில் அத்துமீறி நுழைந்து பள்ளியில் உள்ள பொருட்களை சூறையாடியதோடு, பள்ளி வாகனங்கள், பாதுகாப்பிற்கு வந்த காவல்துறை வாகனங்களை தீயிட்டு எரித்தனர். இதனால், தமிழ்நாடு முழுவதும் இந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் காவல்துறையினர் அந்த பகுதிகளுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்ததோடு, வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.
மேலும் வன்முறை தொடர்பாக வீடியோ காட்சிகளை ஆய்வு செய்து கைது நடவடிக்கை தொடரும் என்றும், கலவரத்தின் போது சமூக வலைத்தளங்களில் வதந்திகளை பரப்புவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு எச்சரித்திருந்தார். இந்நிலையில், சமூகவலைத்தளமான டிவிட்டரில் கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து தவறான தகவல்களை பரப்பியோர் விவரங்களை மாவட்ட காவல்துறை கேட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து டிவிட்டர் நிறுவனத்திற்கு எழுதப்பட்ட கடிதத்தில், பள்ளி மாணவி மரணம் தொடர்பாக கடந்த 17ஆம் தேதி பெரும் கலவரம் ஏற்பட்டு வன்முறை வெடித்ததை சுட்டிக்காட்டியுள்ளது. சம்பவத்தின்போது, சமூக வலைதள பக்கமான ட்விட்டரில் எந்தெந்த ஹேண்டில்களில் இருந்து, கலவரம் குறித்து வதந்தியான தவறான தகவல்கள் பரப்பப்பட்டது என்ற விவரங்களை வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் 32 வகையான வதந்தி செய்திகள் சமூக வலைதளங்களான வாட்ஸ்அப் , ட்விட்டர், ஃபேஸ்புக் , யூடியூப் மூலமாக பரப்பப்பட்டிருந்ததையும் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீசார் அந்த கடிதத்தில் வகைப்படுத்தியிருந்தனர்.
– இரா.நம்பிராஜன்








