சாமியார் நித்யானந்தா, தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு அனுமதிக்குமாறு அடைக்கலம் கோரி இலங்கை அதிபருக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் இருந்து தலைமறைவான நித்யானந்தா, தனித்தீவு ஒன்றை விலைக்கு வாங்கி அதனை தனி நாடாக அறிவித்தார். அதற்கு கைலாசா என பெயரிட்ட அவர், அவ்வப்போது வீடியோ மூலம் காட்சியளித்து, அறிக்கைகளையும் வெளியிட்டு வந்தார். அந்தத் தீவுக்கு அதிபர் அவரே என்று கூறிக் கொண்டார்.
சமீபத்தில் உடல்நலக் குறைவால் நித்யானந்தா உயிரிழந்து விட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. ஆனால், தான் உயிரிழக்கவில்லை என்று தனது முகநூல் பக்கம் மூலம் விளக்கம் அளித்த நித்யானந்தா, தமது புகைப்படத்தையும் அதில் பகிர்ந்தார்.
இதையும் படியுங்கள்: ‘நித்தியானந்தா ஒரு பொருட்டே அல்ல, வந்தால் கைதுதான்’: மதுரை ஆதீனம்
இந்நிலையில், இலங்கையில் அவர் தஞ்சம் கோரி வருவதாகக் கூறப்படுகிறது. அவரது உடல்நிலை மோசமடைந்ததை மேற்கோள் காட்டி, கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி இலங்கையின் அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஒரு கடிதம் எழுதியதாக நம்பகத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.








