தனியார் மயமாக்கலை எதிர்த்து ஜம்மு காஷ்மீர் மின்சாரத்துறை ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசின் சொத்துக்களை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் திட்டத்தை எதிர்த்து ஜம்மு காஷ்மீரின் மின் மேம்பாட்டு துறை ஊழியர்கள்(PDD) ஏறத்தாழ 20,000க்கும் அதிகமானோர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதன் காரணமாக ஜம்மு காஷ்மீரில் பல்வேறு பகுதிகள் இருளில் மூழ்கின. இந்நிலையில் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்ட தொடர் பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்ததையடுத்து ஊழியர் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
இதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரிசெய்ய முதல் கட்டமாக இராணுவ பொறியியல் சேவை பணியாளர்கள் மின் நிலையத்தில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மின் நிலையத்தை இயக்கியும் வருகின்றனர்.
இந்த வேலை நிறுத்த போராட்டத்தின் காணரமாக 15-20% பகுதிகள் மட்டுமே பாதிக்கப்பட்டன. இவையும் தற்போது சரிசெய்யப்பட்டுள்ளது என்று மத்திய மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளார். அதேபோல காஷ்மீரில் உள்ள ஊழியர் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
மின்சார ஊழியர்களின் தேசிய ஒருங்கிணைப்புக் குழு இன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. அதேபோல ஜம்மு காஷ்மீர் அரசுக்கு மாநில மின்சாரத்துறை சங்கங்கள் குறிப்பாணைகளை அனுப்ப வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளன.
தனியார் மயமாதலை கைவிட வேண்டும், தினக்கூலி ஊழியர்களை முறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து மின்ஊழியர்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.