திண்டிவனத்தில் போலீசாரின் ‘ஸ்டாமிங் ஆபரேஷன்’ சோதனையின் போது ரஜினி படத்திற்கு 25 துப்பாக்கி மற்றும் துப்பாக்கியில் பயன்படுத்தப்படும் கத்தி மற்றும் அரசு முத்திரையுடன் வந்த ஜீப்பை மடக்கி பிடித்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில், குற்றச்சம்பவங்கள் தடுக்கும் வகையில் நேற்றிரவு எஸ்.பி.சசாங் சாய் , தலைமையில், திண்டிவனம் டி.எஸ்.பி. சுரேஷ் பாண்டியன் மேற்பார்வையில் போலீசார் ‘ஸ்டாமிங் ஆபரேஷன்’ சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போக்குவரத்து விதிகளை மீறிய வாகன உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டன. சந்தேக நபர்களை கண்காணிக்க திண்டிவனம், ரோசனை,போன்ற இடங்களில் தங்கும் விடுதிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
திண்டிவனம், ரோசனை,வெளிமேடு பேட்டை, மரக்காணம், பிரம்மதேசம், ஆகிய பகுதிகளில் உள்ள ஏ.டி.எம்.,கள், பெட்ரோல் பங்குகள், நகை கடைகள், வணிக நிறுவனங்கள், வங்கி என பல்வேறு இடங்களில் தணிக்கை செய்யப்பட்டது. மேலும், சந்தேக நபர்கள் மீது முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்பொழுது பட்டணம் அருகே போலீஸ் ஜீப் ஒன்று வேகமாக வந்தது. அந்த வாகனத்தை மறித்து திண்டிவனம் போலீசார் சோதனை செய்த போது அதில் 25 கட்டை துப்பாக்கிகள் மற்றும் துப்பாக்கியில் பயன்படுத்தப்படும் கத்தி ஆகியவை இருந்தததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
திண்டிவனம் டிஎஸ்பி சுரேஷ் பாண்டியனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, டிஎஸ்பி அந்த வாகனத்தை சோதனை செய்த போது, அது சினிமா சூட்டிங்க்கிற்கு பயன்படுத்தப்படும் டம்மி துப்பாக்கி என்பதும், ரஜினி நடிக்கும் லால் சலாம் படத்திற்கு செஞ்சியில் சூட்டிங் நடைபெற்று வருவதால் சென்னையில் இருந்து ஷூட்டிங்கிற்காக செஞ்சிக்கு எடுத்துச் சென்றதும் தெரிய வந்தது. போலீசார் அனைத்து துப்பாக்கிகளையும் சோதனை செய்து, ஆவணங்களையும் சரிபார்த்து அரசு முத்திரையை மறைத்து எடுத்துச் செல்ல வலியுறுத்தினர். உடனடியாக அரசு முத்திரை(G) என்ற எழுத்து மறைக்கப்பட்டு ஜீப் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- பி.ஜேம்ஸ் லிசா