ஜெயலலிதா பல்கலைக்கழக இணைப்பு மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் சட்டசபையில் இன்று நிறைவேற்றப்பட்டது.
வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தைப் பிரித்து, விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்டு டாக்டர். ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம், அதிமுக ஆட்சியில் அமைக்கப் பட்டது. முன்னதாக திமுக ஆட்சி அமைந்ததும் இந்தப் பல்கலைக்கழகம் அண்ணாமலை பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்படும் என்று அறிவித்திருந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சட்டப்பேரவையில் ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரம் குறித்து சில நாட்களுக்கு முன் கேள்வி எழுப்பப்பட்டபோது, பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பெயர் வைக்க வேண்டும் என்பதற்காகவே அதிமுக அரசு ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை கொண்டு வந்தது என்று குறிப்பிட்டார். இதை எதிர்த்து, அப்போது அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் மசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் சட்டப்பேரவை நடக்கும் கலைவாணர் அரங்கத்துக்கு வெளியே வாலாஜா சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைப்பதற்கான மசோதா சட்டசபையில் நிறைவேறியது. ஜெயலலிதா பல்கலைக்கழக இணைப்புக்கு இடதுசாரி கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ.க்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேறியதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.