நடிகரும், தவெக தலைவருமான விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ’ஜன நாயகன்’. ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் மமிதா பைஜு, பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரியா மணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
அனிரூத் இசையமைத்துள்ள இப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக படத்தின் வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் ’ஜனநாயகன்’ படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரி படத்தின் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி பி.டி. ஆஷா, ‘ஜனநாயகன்’ படத்தை மறுஆய்வுக் குழு பாா்வையிட பரிந்துரை செய்த தணிக்கை வாரியத் தலைவரின் உத்தரவை ரத்து செய்தும், படத்துக்கு உடனடியாக தணிக்கைச் சான்று வழங்கவும் உத்தரவிட்டாா்.
தனி நீதிபதியின் உத்தரவிற்கு எதிராக மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் தலைமை நீதிபதி தலைமையிலான அமா்வு, , ‘ஜனநாயகன்’ படத்துக்கு உடனடியாகத் தணிக்கைச் சான்று வழங்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தனர். மேலும், படத் தயாரிப்பு நிறுவனம் புதிதாக மனு தாக்கல் செய்யவும், அந்த மனுவை தனிநீதிபதி மீண்டும் விசாரிக்கவும் உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில் தணிக்கை வாரியமானது உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அம்மனுவில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக படத்தயாரிப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டால் அதில் தங்கள் தரப்பு வாதங்களையும் கேட்ட பின்னரே உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.







