தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தென் மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோர பகுதிகளில் (5.8 கிலோமீட்டர் உயரம்வரை) நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கன மழையும், தென் மாவட்டங்கள், டெல்டா (தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை) மாவட்டங்கள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், நாமக்கல் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அக்.6ம் தேதியை பொறுத்த அளவில், நீலகிரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
அதேபோல அக்.7ம் தேதியை பொறுத்த அளவில், வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மிதமான மழையும், தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும்.
அக்.8ம் தேதி, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் அக்.9ம் தேதியன்று, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், வட மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழையும், தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசான மழையும் பெய்ய கூடும். என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் பெரும்பாலான பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழையும் அவ்வப்போது கன மழையும் பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் சத்தியமங்கலம் (ஈரோடு) 8, சித்தார் (கன்னியாகுமரி) 7, பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), எமெரால்ட் (நீலகிரி) தலா 5, பரங்கிப்பேட்டை (கடலூர்), தீர்த்தாண்டதானாம் (ராமநாதபுரம்) தலா 4, அண்ணா பல்கலை (சென்னை), சத்தியபாமா பல்கலை (செங்கல்பட்டு), புழல் (திருவள்ளூர்), பொள்ளாச்சி (கோவை), திருக்கோவிலூர் (கள்ளக்குறிச்சி), திருபுவனம் (சிவகங்கை), பெரியாறு (தேனி), ஊத்துக்குளி (திருப்பூர்) தலா 3, அயனாவரம் (சென்னை), சென்னை நுங்கம்பாக்கம், மேட்டுப்பட்டி (மதுரை), வீரகனூர் (சேலம்), ஆயிக்குடி (தென்காசி), தலா 2, சென்னை விமான நிலையம், மயிலாடுதுறை, காரியாபட்டி (விருதுநகர்), மகாபலிபுரம் (செங்கல்பட்டு), கடம்பூர் (தூத்துக்குடி), மீமிசல் (புதுக்கோட்டை), காட்பாடி (வேலூர்), பாபநாசம் (திருநெல்வேலி), பரமத்திவேலூர் (நாமக்கல்), காஞ்சிபுரம், திருவாரூர் பாடாலூர் (பெரம்பலூர்) வேங்கூர் (கள்ளக்குறிச்சி) தலா 1 செம.மீ அளவில் மழை பதிவாகியுள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நாளை தமிழக கடற்கரை ஒட்டிய தென் மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அக்.8ம் தேதியை பொறுத்த அளவில், மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
6 மாவட்டங்களில் மிக கன மழைக்கு வாய்ப்பு
அதேபோல, அரியலூர் பெரம்பலூர் கள்ளக்குறிச்சி சேலம் திருவண்ணாமலை கடலூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.