மன்னிப்பு கேட்டு கடிதம் கொடுக்க வேண்டிய இடத்தில் இருப்பது ஈபிஎஸ் அணியினர் தான் எனவும், கொடநாடு வழக்கு தொடர்பான போராட்டங்களுக்கு எங்களின் ஆதரவு உண்டு என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
காமராஜரின் 121வது பிறந்தநாளையொட்டி அண்ணா சாலை ஜிம்கானா கிளப் முன்பு அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
”மன்னிப்பு கேட்டு கடிதம் கொடுக்க வேண்டிய இடத்தில் இருப்பது எடப்பாடி பழனிசாமி அணியினர் தான். திமுக ஃபயில்ஸ்-2வை நானும் அதிக ஆர்வமுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். கூட்டணியில் போட்டியிட வேண்டும், பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தி போட்டியிட வேண்டும் என்பது தான் அமமுக கட்சியின் நோக்கம். ஆனால் கூட்டணி இல்லை என்றாலும் 2019 தேர்தலில் போட்டியிட்டது போல தனித்துப் போட்டியிடுவோம்.
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இருக்கும்போது நிறைய கொடநாடு தொடர்பான பல தடயங்களை அழித்ததாக தகவல் வருகிறது. இதற்கு தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டமும் போராட்டம் நடத்துவது தவறு இல்லை. கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க ஆர்ப்பாட்டமும் போராட்டம் நடத்தினால் அதற்கு எங்கள் ஆதரவு உண்டு.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.







