டெண்டர் ஊழல் குற்றச்சாட்டு வழக்கு விசாரணையில் முன்னாள் அமைச்சர் வேலுமணிக்காக மத்திய அரசின் வழக்கறிஞர்(Additional Solicitor General) வாதாடுவது தார்மீக அடிப்படையில் நியாயமில்லை என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்தார்.
டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனவும், மத்திய அரசு வழக்கறிஞர் எப்படி வேலுமணிக்கு ஆதரவாக ஆஜராகலாம் எனவும் தமிழக அரசுத் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
முந்தைய அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி வேலுமணி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவுகளில் கூறப்பட்டுள்ளதாவது:
டெண்டர் ஊழல் குற்றச்சாட்டு வழக்கு விசாரணையில் முன்னாள் அமைச்சர் வேலுமணிக்காக மத்திய அரசின் வழக்கறிஞர்(Additional Solicitor General) வாதாடுவது தார்மீக அடிப்படையில் நியாயமில்லை.
அமைச்சர் வீடுகளில் நடைபெற்ற வருமான வரித் துறை சோதனை குறித்தான வழக்குகளில் வருமான வரித் துறைக்காக வாதிடும் வழக்கறிஞர் ஒருவர் அமைச்சருக்கு ஆதரவாக வாதாடுவது முரண்பாடான நிலைப்பாடாகும். இதற்கு மத்திய அரசு அனுமதியளித்திருப்பது, பாஜக அரசின் ஊழல் ஒழிப்பு நிலைப்பாட்டை தோலுரித்துக் காட்டுவதாக உள்ளது.
இந்த அனுமதியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். மேலும், அனைத்து வழக்குகளிலும் எதிர்கட்சியினர், கூட்டணிக் கட்சியினர் என்ற பாகுபாடு இல்லாமல் “நீதியின் பாதையில்” வழக்குகள் நடத்தப்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது என்று அந்தப் பதிவுகளில் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.