உக்ரைன் போர் தொடர்பான மாநாட்டில், நேட்டோ அமைப்பில் தங்களை இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை குறித்து விவாதிக்காமல் இருப்பது மிகவும் தவறு என்று அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு வலிமை பெற்று விளங்கிய சோவியத் யூனியன், மற்ற ஐரோப்பிய நாடுகளை ஆக்கிரமிப்பதைத் தடுத்து நிறுத்துவதற்காக 1949-ம் ஆண்டில் நேட்டோ அமைப்பு தொடங்கப்பட்டது. ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் இவற்றுடன் தொடங்கப்பட்ட இந்த நேட்டோ அமைப்பு, சோவியத் யூனியன் சிதறி வலுவிழந்த பிறகும் புதிய உறுப்பினர்களைச் சேர்த்துக்கொண்டு தனது பலத்தை பெருக்கி வந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுபோன்று நேட்டோ அமைப்பு தங்களை நாலாபுறமும் சுற்றிவளைப்பதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்தது. எனினும், உக்ரைன் அதிபராக கடந்த 2019-ம் ஆண்டு பொறுப்பேற்ற வொலோதிமீர் ஜெலன்ஸ்கி, ரஷ்யாவின் எதிர்ப்பையும் மீறி நேட்டோவில் இணைவதற்கு ஆர்வம் காட்டினார். அதையடுத்து, உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி படையெடுத்தது.
இந்த போரில் உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் கோடிக்கணக்கான டாலர் மதிப்புடைய ஆயுத தளவாடங்களை அளித்தது. எனினும், நேட்டோ கூட்டமைப்பில் இணைத்துக் கொள்வதுதான் ரஷ்யாவிடமிருந்து தங்களைப் பாதுகாப்பதற்கான வழி என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தி வருகிறார். எனினும், உக்ரைனை நேட்டோவில் இணைத்துக் கொள்வதில் சில உறுப்பு நாடுகள் ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் வடகிழக்கு ஐரோப்பிய நாடான லிதுவேனியாவின் தலைநகர் வில்னியஸில் நேட்டோ அமைப்பின் 2 நாள் மாநாடு நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டில் உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு, ஸ்வீடன் மற்றும் உக்ரைனுக்கு நேட்டோவில் இடமளிக்கும் விவகாரம் ஆகியவை குறித்து விவாதிப்பதற்காக நடைபெறுகிறது என கூறப்பட்டது.
இதுகுறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் அவர் கூறியதாவது:
“லிதுவேனியாவில் நடைபெறும் நேட்டோ மாநாட்டின் பேச்சுவார்த்தை குறித்து அங்குள்ள உக்ரைன் பிரதிநிதிகளுக்கு தெரியவந்துள்ளது. அவர்களின் கருத்துப்படி நேட்டா அமைப்பில் இணைத்துக் கொள்வதற்காக உக்ரைனுக்கு அழைப்பு விடுப்பது குறித்து விவாதம் நடைபெறாது என்று தெரிகிறது.
உக்ரைன் போர் தொடர்பான அந்த மாநாட்டில், நேட்டோவில் எங்களை இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை குறித்து விவாதிக்காமல் இருப்பது மிகவும் தவறு. நேட்டாவின் ராணுவக் கூட்டமைப்பில் எங்களை இணைத்துக் கொள்வதற்கோ, அதற்கான அழைப்பு விடுப்பதற்கோ நேட்டோ தயாராக இல்லை என்பது கண்கூடாகத் தெரிகிறது.” என்று தனது ட்விட்டர் பதிவில் ஜெலன்ஸ்கி சாடியுள்ளார்.