இஸ்ரேல் மீது 5,000க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை காசா பகுதியிலிருந்து ஹமாஸ் அமைப்பினர் வீசி தாக்குதல் நடத்தியதாக தெரிவித்த இஸ்ரேல், பாலஸ்தீனம் மீது போருக்கு தயார் என அறிவித்துள்ளது. இதனால் அந்த பகுதியில் உச்சகட்ட பதற்றம் நிலவி வருகிறது.
இஸ்ரேல் – பாலஸ்தீனம் கடந்த பல ஆண்டுகளாகவே காசா பகுதியில் மோதல் நிலவி வருகிறது. இந்த காசா பகுதியை இஸ்ரேல் சொந்தம் கொண்டாடுவதே இதற்கு முக்கிய காரணமாகும். இஸ்ரேலுக்கு எதிராக போராடி வரும் பாலஸ்தீனில் உள்ள ஹமாஸ் படையை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது.
இந்தநிலையில் காசா பகுதியில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. அதிகாலை 6 மணிக்கு இந்தத் தாக்குதல் தொடங்கியதாகவும், சில மணி நேரத்தில் சுமார் 5000 ஏவுகணைகள் இஸ்ரேலை தாக்கியதாக இஸ்ரேல் கூறியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
காசாவில் பல்வேறு இடங்களில் இருந்து நடத்தப்பட்ட இந்த ஏவுகணை தாக்குதலில், இஸ்ரேல் நாட்டை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், ஹமாஸ் அமைப்பினர் பெரும் எண்ணிக்கையில் ஊடுருவி தாக்குதல் நடத்தி வருவதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
காசாவில் இருந்து ராக்கெட்டுகள் ஏவப்பட்டதை அடுத்து இஸ்ரேல் போர் நிலையை அறிவித்துள்ளது. இதனால் மக்களை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறும் இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து இஸ்ரேல் ராணுவம் தனது எக்ஸ் தளத்தில், “கடந்த ஒரு மணி நேரமாக காசா பகுதியில் இருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணை தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. மேலும், ஹமாஸ் அமைப்பினர் பல்வேறு இடங்கள் மூலம் இஸ்ரேல் எல்லைக்குள் ஊடுருவினர்” என்று தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல் தொடர்பாக பல்வேறு வீடியோக்கள் இணையத்திலும் டிரெண்டாகி வருகின்றன.
இஸ்ரேலின் ஸ்டெரோட் என்ற பகுதியை ஹமாஸ் படையினர் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டதாகவும் சண்டையில் பலர் காயமடைந்ததாகவும் இஸ்ரேலிய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. மேலும், பாலஸ்தீனப் படையினர் இஸ்ரேலின் ஸ்டெரோட்டில் துப்பாக்கிச் சூடுகளையும் நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே காசா பகுதியில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவு வரை அவசர நிலை ஏற்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் அறிவித்துள்ளார். பாலஸ்தீனின் ஹமாஸ் படைக்குப் பதிலடி கொடுக்கும் முயற்சியிலும் இப்போது இஸ்ரேல் இறங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.