மத்திய அரசு திட்டங்கள் குறித்து அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் முதலமைச்சரை சந்திக்காமல் துணை நிலை ஆளுநரை சந்திப்பது வேடிக்கையாக உள்ளதாக நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், மத்திய அரசு திட்டங்கள் கிடப்பில் உள்ளது அவற்றை துரிதமாக செயல்படுத்த வேண்டுமென கோரிக்கை வைத்து பாஜக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் துணைநிலை ஆளுநரை சந்தித்து புகார் அளித்துள்ளதாக சாடினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மாநில முதலமைச்சரை சந்திக்காமல் துணைநிலை ஆளுநரை பாஜக அமைச்சர்கள் சந்தித்துள்ளது விந்தையாக உள்ளது என தெரிவித்த அவர், புதுச்சேரியில் என்.ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக இணைந்து ஆட்சி நடத்துகிறதா? அல்லது
என்.ஆர். காங்கிரஸ் தான் ஆட்சி நடைபெறுகிறதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக கூறினார்.
பாஜக அமைச்சர்கள் முதலமைச்சரை சந்திக்காமல், துணைநிலை ஆளுநரிடம் புகார் கூறுவது முதலமைச்சர் மீது அமைச்சர்கள் நம்பிக்கை இழந்துவிட்டதை காட்டுவதாக குற்றம்சாட்டினார். இதன் மூலம் தமிழிசை சௌந்தரராஜன் புதுச்சேரிக்கு சூப்பர் முதலமைச்சர் என்று சொன்னது உறுதியாகி உள்ளது என்றும், ரங்கசாமி டம்மி முதலமைச்சராக செயல்படுவது இதன் மூலம் உறுதி ஆகி உள்ளது என்றும் நாராயணசாமி சாடினார்.
திட்டங்கள் நடைபெறவில்லை என புகார் கூறுவது மக்களை ஏமாற்றும் வேலை. மேலும் கூட்டணியே முதலமைச்சரை குறை கூறி உள்ள கேலிக்கூத்தான சம்பவம் நாட்டில் எங்கும் நடக்காது என்றார். பாஜக அமைச்சர்களுக்கு முதலமைச்சர் ரங்கசாமி மீது நம்பிக்கை இல்லை என்றால் அவர்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என கூறிய அவர், கூட்டணிக்கு குழி பறிக்கும் வேலையை பாஜக செய்வதாக சுட்டிக்காட்டினார்.
– இரா.நம்பிராஜன்