11ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்வதற்கான திட்டம் இல்லை என்று கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
புதுக்கோட்டை வந்திருந்த அமைச்சர் அன்பில் மகேஸ் செய்தியாளர்களிடம் இதுகுறித்து மேலும் கூறியதாவது:
ஒரே நாடு ஒரே தேர்வு முறையை மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால் அது பற்றி தமிழக அரசு சிந்திக்கவில்லை. கள்ளக்குறிச்சி பள்ளி வன்முறை பாதிக்கப்பட்ட மாணவிகள் சான்றிதழ்கள் எவ்வளவு விரைவில் அளிக்க முடியுமா அவ்வளவு விரைவாக சிறப்பு முகாம் நடத்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
11ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்வதற்கான திட்டம் எதுவுமில்லை என்றார் அமைச்சர் அன்பில் மகேஸ்.
முன்னதாக, 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்வது குறித்து பரிசீலனை நடைபெற்று வருதாக செய்திகள் வெளியாகியிருந்தன. அதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளிடம் செய்தியாளர்கள் தொடர்பு கொண்டு கேட்டபோது அவ்வாறு எந்தவொரு பரிசீலனையும் நடைபெறவில்லை என்று மறுத்தனர்.
இந்த நிலையில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும் இதுதொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு விளக்கம் அளித்துள்ளார்.








