10 அணிகள் பங்கேற்ற 15வது சீசன் ஐபிஎல் தொடரின் இறுதிகட்டம் கிட்டத்தட்ட நெருங்கிவிட்டது. லீக் ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில், இன்று முதலாவது தகுதிச் சுற்று ஆட்டம் நடைபெறவுள்ளது.
லீக் ஆட்டங்கள் முடிவில், குஜராத் டை்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய 4 அணிகள் பிளே-ஆஃப் சுற்றான இறுதிச்சுற்றுக்கு முந்தைய சுற்று ஆட்டத்துக்கு முன்னேறியது. ஹார்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணியும் இன்று முதலாவது தகுதிச் சுற்றில் மோதவுள்ளன. இதற்கு முன்பு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை கடந்த ஏப்ரல் 14ம் தேதி லீக் சுற்றில் சந்தித்த குஜராத் அணி, 37 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணியை வீழ்த்தியிருந்தது. இதனால், குஜராத் அணிக்கு பதிலடி கொடுக்க ராஜஸ்தான் அணி முனைப்பு காட்டும். குஜராத் அணியில் மாத்யூ வேட், ஹார்திக் பாண்டியா, விருத்திமான் சஹா, சுபமன் கில், டேவிட் மில்லர் என அதிரடி வீரர்கள் உள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ராஜஸ்தானில் சஞ்சு சாம்சன், யஷாஸ்வி ஜெய்ஸ்வால், தேவ்தத் படிக்கல் என அதிரடி வீரர்களும், பந்துவீச்சில் அஸ்வின், போல்ட், சாஹல் ஆகியோரும் பலமாக உள்ளனர்.
அறிமுகமான முதல் சீசனிலேயே குஜராத் டை்டன்ஸ் தனது அபார ஆட்டத்தால் கிரிக்கெட் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. ராஜஸ்தான் அணி கடைசியாக 2008ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்றது. அதன் பிறகு ஒரு முறை கூட அந்த அணியால் சாம்பியன் பட்டம் வெல்ல முடியவில்லை. இதன்காரணமாக அந்த அணி இந்த சீசனில் சாம்பியன் பட்டத்தை வெல்ல தீவிரம் காட்டும். இந்த ஆட்டத்தில் ஜெயிக்கும் அணி நேரடியாக இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும். தோற்கும் அணிக்கு மற்றொரு வாய்ப்பு கிடைக்கும். முதல் தகுதிச்சுற்றில் தோல்வி அடையும் அணி, எலிமினேட்டர் சுற்றில் ஜெயிக்கும் அணியுடன் மீண்டும் ஒரு முறை மோதும்.
அதன்படி இரண்டாவது தகுதிச்சுற்றில் ஜெயிக்கும் அணி, முதல் தகுதிச்சுற்றில் ஜெயித்த அணியுடன் இறுதிச்சுற்றில் மோதும். இன்று நடைபெறவுள்ள முதலாவது தகுதிச்சுற்று கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது. நாளை நடைபெறவுள்ள வெளியேற்றும் சுற்றில் புள்ளிப் பட்டியலில் 3வது இடத்தில் உள்ள லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் நாளை இதே கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது.
இரண்டாவது தகுதிச்சுற்றும் (மே 27), இறுதி ஆட்டமும் (மே 29) குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. சமபலம் வாய்ந்த அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ள ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.