ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி, டெல்லி அணி வெற்றி பெற்றது.
ஆமதாபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 29 லீக் ஆட்டத்தில், டெல்லி கேப்பிட்டல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட் செய்த பஞ்சாப் அணியின் மயங்க் அகர்வால் நிலைத்து நின்று ஆடி, 99 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பிரப்சிம்ரன் சிங் 12 ரன்னிலும், கிறிஸ் கெய்ல் 13 ரன்னிலும், டேவிட் மலான் 26 ரன்னிலும், வெளியேறினர். இதையடுத்து, 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுக்கு 166 ரன்கள் சேர்த்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அடுத்தாக களமிறங்கிய டெல்லி அணி 17.4 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 167 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றியை ருசித்தது. ஷிகர் தவான் 69 ரன்களுடனும், ஹெட்மயர் 16 ரன்களுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். முன்னதாக பிரித்வி ஷா 39 ரன்களும், ஸ்டீவன் சுமித் 24 ரன்களும், கேப்டன் ரிஷாப் பண்ட் 14 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

முன்னதாக, நேற்று மாலை, டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில், நடைபெற்ற 28 வது லீக் ஆட்டத்தில், ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்சை எதிர்கொண்டது. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்கு 220 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய ஐதரபாத் அணியால், 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 165 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் ராஜஸ்தான் 55 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.