பெண் காவலர்கள் குறித்த நேர்காணல் – பெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஒருநாள் போலீஸ் காவல்!

யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க திருச்சி கூடுதல் மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  காவல் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்களை தவறாக பேசிய சவுக்கு சங்கரை நேர்காணல் செய்து அதனை தனது…

யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க திருச்சி கூடுதல் மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

காவல் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்களை தவறாக பேசிய சவுக்கு
சங்கரை நேர்காணல் செய்து அதனை தனது ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலில் வெளியிட்டதாக, யூடியூப் சேனல் எடிட்டர் பெலிக்ஸ் ஜெரால்ட் கடந்த 10ம் தேதி டெல்லியில் திருச்சி மாவட்ட சைபர் கிரைம் குற்ற பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.  அவரை மே 27-ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.  இதையடுத்து அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில்,  பெலிக்ஸ் ஜெரால்டு தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நீதிபதி ஜெயபிரதா முன்னிலையில் நடைபெற்றது.  அப்போது,  பெலிக்ஸ் ஜெரால்டுவை போலீஸ் காவலில் விசாரணை நடத்த அனுமதிக்க கோரி திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீஸார் மனு தாக்கல் செய்தனர்.  இதற்கு பெலிக்ஸ் ஜெரால்டு தரப்பு வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்க,  இரு தரப்பு வழக்கறிஞர்கள் இடையே  விவாதம் நடைபெற்றது.

இதனையடுத்து ஃபெலிக்ஸ் ஜெரால்டை  ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி ஜெயப்பிரதா உத்தரவிட்டார்.  மேலும் நாளை மதியம் மூன்று மணிக்கு மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டார்.  மேலும் ஜாமீன் மனு மீதான விசாரணை 22 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  இதுவரை இரண்டு முறை இவரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.