கேரள மாநிலத்தில் ஜிகா வைரஸ் வேகமாக பரவி வருவதையடுத்து, தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் மேலும் 3 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜிகா வைரஸ் அறிகுறி தென்பட்ட 8 பேரின் ரத்த மாதிரிகள் எடுத்து மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதில் 2 வயது குழந்தை உள்ளிட்ட மூவருக்கு உறுதியாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து கேரளாவில் ஜிகா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுயத்து கோவை மாவட்டம் தமிழக – கேரளா எல்லையான வாளையார் சோதனை சாவடியில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சோதனை சாவடியில் சுழற்சி முறையில் காவலர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இப்பணிகளை மாவட்ட ஆட்சியர் சமீரன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
இதனிடையே, பொள்ளாச்சி அடுத்த கோபாலபுரம் கோவிந்தாபுரம், மீனாட்சிபுரம் உள்ளிட்ட 7 வழித்தடங்களிலும் போலீசார் வாகன சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். கேரள மாநிலத்தில் ஜிகா வைரஸ் அதிகரித்து வருவதால் தங்கள் பகுதியில் மருத்துவக்குழுவினரை சோதனை சாவடியில் பணியமர்த்தி கண்காணிப்புகளை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.