‘ஐஎன்எஸ் சந்தாயக்’ ஆய்வுக் கப்பல் இந்திய கடற்படையில் இணைப்பு!

இந்திய கடற்படையில் ‘ஐஎன்எஸ் சந்தாயக்’ ஆய்வுக் கப்பல் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்னிலையில் முறைப்படி இணைக்கப்பட்டது. கொல்கத்தாவில் உள்ள ‘கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் இன்ஜினீயர்ஸ்’ நிறுவனம் இந்திய கடற்படைக்காக…

இந்திய கடற்படையில் ‘ஐஎன்எஸ் சந்தாயக்’ ஆய்வுக் கப்பல் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்னிலையில் முறைப்படி இணைக்கப்பட்டது.

கொல்கத்தாவில் உள்ள ‘கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் இன்ஜினீயர்ஸ்’ நிறுவனம் இந்திய கடற்படைக்காக 4 ஆய்வுக் கப்பல்களை தயாரித்து வருகிறது. இதில் முதல் கப்பலான ‘ஐஎன்எஸ் சந்தாயக்’ கடந்த ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி இந்திய கடற்படையிடம் வழங்கப்பட்டது. இதையடுத்து துறைமுகம் மற்றும் கடலில் விரிவான சோதனை நடைபெற்றது.

இந்நிலையில் இந்திய கடற்படையில் ‘ஐஎன்எஸ் சந்தாயக்’ நேற்று (பிப். 03) முறைப்படி இணைக்கப்பட்டது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கடற்படை தளத்தில் நடைபெற்ற விழாவில், மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இதனை கடற்படையில் இணைத்து வைத்தார். கடற்படை தளபதி அட்மிரல் ஆர்.ஹரிகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் இதில் பங்கேற்றனர். இந்த விழாவில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசும்போது, “ஏடன் வளைகுடா, கினியா வளைகுடா உள்ளிட்ட சர்வதேச வர்த்தகம் நடைபெறும் பகுதிகள் இந்திய பெருங்கடலில் உள்ளன. இந்தப் பகுதிகளில் காணப்படும் அச்சுறுத்தல்களில், கடற்கொள்ளை பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. அண்மையில் இந்திய கப்பல்கள், பிற நட்பு நாடுகளின் வணிக கப்பல்களை கடற்கொள்ளையர்கள் சிறைப்பிடித்தனர்.

அவர்களிடமிருந்து கப்பல்களை மீட்கும் பணியில் இந்திய கடற்படை வீரர்கள் சிறப்பாகச் செயல்பட்டனர். கடல் பகுதியில் நடைபெறும் கொள்ளை மற்றும் கடத்தல் சம்பவங்களைப் பொறுத்துக் கொள்ள முடியாது. கடற்படையில் இணைக்கப்பட்டுள்ள ‘ஐஎன்எஸ் சந்தாயக்’ இந்திய-பசிபிக் பெருங்கடல் பிராந்தியத்தில் சக்திவாய்ந்த நாடாக இந்தியாவைப் பலப்படுத்தும். பெருங்கடல்கள் குறித்த தகவலைச் சேகரிக்கும் இந்த ஆய்வுக் கப்பல், பிராந்தியத்தில் பாதுகாப்பு, அமைதியை உறுதி செய்வதில் இந்திய கடற்படைக்கு உதவியாக இருக்கும்’” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.