விண்வெளித் துறையில் வீறுநடை போடும் இந்தியா!

உலகமே திரும்பி பார்க்கும் அளவிற்கு விண்வெளித் துறையில் இந்தியா பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. விண்வெளித் துறையின் மைல் கற்களாக கருதப்படும் சாதனைகளில் சிலவற்றைப் பார்ப்போம்… முதல் செயற்கைக்கோள் (ஆர்யபட்டா): இந்தியாவின் தலைசிறந்த வானியல்…

உலகமே திரும்பி பார்க்கும் அளவிற்கு விண்வெளித் துறையில் இந்தியா பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. விண்வெளித் துறையின் மைல் கற்களாக கருதப்படும் சாதனைகளில் சிலவற்றைப் பார்ப்போம்…

முதல் செயற்கைக்கோள் (ஆர்யபட்டா):

இந்தியாவின் தலைசிறந்த வானியல் அறிஞரான ஆர்யபட்டாவின் பெயரில் 1975 ஏப்ரல் 19-ம் தேதி ஏவப்பட்டது. இந்த ஆர்யபட்டா செயற்கைக்கோள் சுமார் ரூ.5 கோடி செலவில் முழுக்க இந்தியாவில் வடிவமைக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகலாக சுமாா் 250 பொறியாளா்களின் உழைப்பின் பலனாக ஆர்யபட்டா வடிவமைக்கப்பட்டது. பூமியில் இருந்து சுமார் 700 கி.மீ. உயரத்தில் நாளொன்றுக்கு 15 முறை வீதம், தனது ஆயுள் காலமான 6 மாதங்கள் வரை சுற்றி வந்தது. இந்த செயற்கைக்கோள் இந்தியாவில் வடிவமைக்கப்பட்டிருந்தாலும், இந்தியாவிடம் அப்போது ஏவுகலம் இல்லை என்பதால் அப்போதைய சோவியத் காஸ்மோஸ் 3 எம் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.

மறுபயன்பாட்டு ஏவுகலன் (ஆர்.எல்.வி. டி.டி):

விண்வெளி ஆராய்ச்சியில் ஏவுகலன்களுக்கான செலவு மிகப்பெரியதாகும். அமெரிக்கா தனது செயற்கைக்கோள்களை ஏவுவதற்காக என்டர்பிரைஸ், கொலம்பியா, சேலஞ்சர், டிஸ்கவரி, அட்லாண்டிஸ், என்டேவர் போன்ற விண்வெளி ஷட்டில்களை பயன்படுத்தி வந்தது. எனவே மறுபயன்பாட்டு ஏவுகலனை உருவாக்குவதற்காக இந்திய விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து கடந்த 2016-ம் ஆண்டு ஆர்.எல்.வி. டி.டி. என்ற மறுபயன்பாட்டு ஏவுகலனை இஸ்ரோ விஞ்ஞானிகள் ரூ.95 கோடி செலவில் தயாரித்து சோதனை செய்தனர். இது இன்னும் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை மறுபயன்பாட்டு ஏவுகலன் தயாரிப்பு என்பது மிக முக்கிய மைல் கல்லாக பாா்க்கப்படுகிறது.

இன்சாட்: 

இந்திய தேசிய செயற்கைக்கோள் தொகுதி என்று அழைக்கப்படும் இந்த செயற்கைக்கோள், ஆசிய – பசிபிக் பிராந்தியத்தில் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய உள்நாட்டுத் தகவல் தொடர்பு அமைப்பு என்ற பெருமைக்குரியது. 1983-ம் ஆண்டு இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், தொலை தொடர்புத் துறை, இந்திய வானிலை ஆய்வுத் துறை, அகில இந்திய வானொலி, தூர்தர்ஷன் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் உருவானது. இன்சாட் தொகுதியில் அனுப்பப்பட்ட 9 செயற்கைக்கோள்களால் தான், இந்தியாவில் தகவல் தொடர்பு, தொலைக்காட்சி ஒளிபரப்பில் பல்வேறு உச்சங்களை எட்ட முடிந்தது. காலநிலை மாற்றத்தை அறிந்து கொள்ளவும் பேருதவியாக இருந்தது. இந்த தொகுதியில் மொத்தம் 21 செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்ட நிலையில் அவற்றில் 11 இயக்கத்தில் உள்ளன.

பிஎஸ்எல்வி:

போலார் சாட்டிலைட் லாஞ்ச் வெஹிகிள் என்ற பெயர் கொண்ட பிஎஸ்எல்வி, இந்தியாவின் மிக முக்கிய செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி, இந்தியாவின் விண்வெளி சாதனைகள் பலவற்றுக்கும் காரணமாக விளங்குகிறது. 1993ம் ஆண்டு முதலே பிஎஸ்எல்வி திட்டம் தொடங்கினாலும், அதன் வெற்றிகரமான பயணம் 1994-ம் ஆண்டில் இருந்து தொடங்கியது.1994-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை 38 முறை பிஎஸ்எல்வி விண்ணில் செலுத்தப்பட்டது. இதில் 37 முறை தொடர்ச்சியாக வெற்றி பெற்று, 121 செயற்கைக்கோள்களை செலுத்தியுள்ளது. இதில் 79 செயற்கைக்கோள்கள் சுமாா் 20 செயற்கைக்கோள்கள் வெளிநாடுகளுக்கு சொந்தமானவை மற்றும் 42 செயற்கைக்கோள்கள் இந்தியாவுக்கு சொந்தமானவை.

சந்திரயான் 1, மங்கள்யான், அஸ்ட்ரோசாட், எஸ்ஆா்இ -1, நேவிக் ஆகிய முக்கியமான திட்டங்களை இஸ்ரோ விஞ்ஞானிகள் செய்வதற்கு உதவியாக இருந்தது பிஎஸ்எல்வி ஏவுகலன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்திரயான் – 1:

நிலவுக்கு செயற்கைக்கோளை அனுப்பி ஆய்வு செய்வது என்ற எண்ணம் 1999-ம் ஆண்டிலேயே இந்திய விஞ்ஞானிகளுக்கு ஏற்பட்டது. இதற்காக ஒரு திட்டக்குழு 2000-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. 2003-ம் ஆண்டு புகழ்பெற்ற பல்வேறு துறை அறிவியல் விஞ்ஞானிகள் கூடி நிலவுக்கு ஆளில்லா விண்கலனை அனுப்பும் திட்டப் பரிந்துரைக்கு ஒப்புதல் அளித்தனர். இதைத் தொடா்ந்து இந்திய அரசும் ஒப்புதல் அளிக்கவே சந்திரயான் 1 திட்டம் தொடங்கியது.

ரூ.386 கோடி திட்ட மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்திற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தலைவராக இருந்தார். பிஎஸ்எல்வி எக்ஸ் எல் ராக்கெட் மூலம் 2008 அக்டோபா் 22-ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. இது நவம்பா் 8-ம் தேதி நிலவின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. சந்திரயானில் இருந்து பிரிந்த கலன் 2008 நவம்பர் 14-ம் தேதி நிலவில் இறங்கி, இந்திய கொடியை நட்டதன் மூலம், நிலவில் ஏதாவது ஒரு பொருளை வைத்த 4வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.

மங்கள்யான்:

செவ்வாய் கிரக சுற்றுக்கலன் திட்டம் (மார்ஸ் ஆர்பிடர் மிஷன்) என்ற செவ்வாய் கிரகத்துக்கு ஆளில்லாத விண்கலனை ஏவும் திட்டம் கடந்த 2013 நவம்பர் 5ம் தேதி தொடங்கியது. முன்னதாக நிலவை அடைந்த இந்திய விஞ்ஞானிகள், சூரியனை சுற்றிவரும் கோள்களுக்குப் பயணம் செய்யும் திட்டத்தை 2010-ம் ஆண் கொண்டு வந்தனர். ரூ.454 கோடி மதிப்பிலான இந்தத் திட்டத்துக்கு 2012-ம் ஆண்டு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. விண்வெளி ஆய்வில் ஜாம்பவானான அமெரிக்காவின் முதலாவது செவ்வாய் கிரக ஆய்வுத் திட்டமான ஃபோனிக்ஸை காட்டிலும் மங்கள்யானின் திட்ட மதிப்பு 10 மடங்கு குறைவாகும். இஸ்ரோவின் கோள்களுக்கு இடையிலான முதலாவது பயணத் திட்டமும் இதுவாகும். மேலும், 2014 செப்டம்பர் 24-ம் தேதி செவ்வாயின் சுற்றுவட்டப் பாதையில் மங்கள்யான் இணைந்ததன் மூலம், முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைக்கோளை அனுப்பிய நாடு என்ற பெருமையையும் இந்தியா பெற்றது.

செவ்வாய்யின் புறவடிவம், நிலப்பரப்பு, கனிமங்கள், வாயுக்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்யும் நோக்கில் இது அனுப்பப்பட்டது. கடந்த 2022 அக்டோபர் மாதம் வரை இது பூமியுடன் தொடர்பில் இருந்து வந்தது.

நேவிக்:

ஐஆர்என்எஸ்எஸ் எனப்படும் இந்தத் திட்டம், இந்தியாவின் வரைபடத் துல்லியத் தன்மைக்காக ஏவப்பட்டது. 7 செயற்கைக்கோள்களைக் கொண்ட இந்தத் தொகுப்பானது நேவிகேஷனை முக்கிய குறிக்கோளாகக் கொண்டது என்பதால் கடலோடிகள், வாகன ஓட்டுநர்கள், பொதுமக்கள், பேரிடர் மேலாண்மை, அரசின் பயன்பாடுகளுக்கு மட்டுமின்றி நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் ராணுவத்துக்கும் பெரிதும் பயன்படுகிறது. கடல் பகுதியில் 20 மீட்டருக்கும் குறைவாகவும், நிலப் பகுதியில் 10 மீட்டருக்கும் குறைவாகவும் கூட துல்லியமாக ஊடுருவிப் பார்க்கக் கூடிய வசதியைக் கொண்டிருக்கின்றன. இந்த செயற்கைக்கோள்கள். 2013 ஜூலையில் தொடங்கிய இந்தத் திட்டத்தின் கீழ் 2018 வரை 9 செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டன. இதில் இரண்டு செயற்கைக்கோள்கள் தோல்வியில் முடிவடைந்தாலும், திட்டப்படி 7 செயற்கைக்கோள்கள் இயக்கத்தில் இருந்து வருகின்றன.

பிஎஸ்எல்வி சி 34:

2016 ஜூன் 22-ம் தேதி இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் மற்றொரு மைல் கல்லாகும். பிஎஸ்எல்வியின் 36-வது ஏவுகலன் விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது. அதுமட்டுமின்றி ஒரே ஏவுகலனில் அதிகப்படியான செயற்கைக்கோள்களை வைத்து இஸ்ரோ வெற்றிகரமாக ஏவியது அதுதான் முதல் முறை. மொத்தம் 20 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி சாதனை படைத்தனர் இஸ்ரோ விஞ்ஞானிகள்.  அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, இந்தோனேஷியா போன்ற நாடுகளின் செயற்கைக்கோள்களும் அந்த விண்கலனில் அடங்கும். அதன் பிறகு 2017 பிப்ரவரி மாதம் அந்த சாதனையை தகர்க்கும் விதமாக இஸ்ரோ விஞ்ஞானிகள் ஒரே நேரத்தில் 104 செயற்கைக்கோள்களை ஒரு ராக்கெட்டில் வைத்து அனுப்பி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.