“சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணி” – குடியரசு தலைவர் மற்றும் பிரதமர் மோடி வாழ்த்து!

சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணிக்கு குடியரசு தலைவர் மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டி துபாயில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணிக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

“ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இக்கோப்பையை மூன்று முறை வென்ற ஒரே அணி என்ற பெருமை இந்தியாவிற்கு கிடைத்துள்ளது. இந்த வரலாற்றை படைத்ததற்காக, வீரர்கள், நிர்வாகம் மற்றும் பயிற்சியாளர்கள் மிக உயரிய பாராட்டுகளை பெற தகுதி பெற்றவர்கள். இந்திய கிரிக்கெட்டிற்கு சிறந்த எதிர்காலம் கிடைக்க வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் பிரதமர் நரேந்திர நரேந்திர மோடியும் வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

“ஒரு விதிவிலக்கான ஆட்டம் மற்றும் ஒரு விதிவிலக்கான முடிவு! ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வீட்டிற்கு கொண்டு வந்த எங்கள் கிரிக்கெட் அணியைப் பற்றி பெருமைப்படுகிறோம். அவர்கள் போட்டி முழுவதும் அற்புதமாக விளையாடியுள்ளனர். அற்புதமான ஒட்டுமொத்த அணிக்கு வாழ்த்துகள்”. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள், மற்றும் பிரபலங்கள் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.