ஆசிய விளையாட்டுப் போட்டி வரலாற்றில் முதன்முறையாக இந்தியா 100 பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளதற்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா மிகப் பெரிய சாதனை படைத்துள்ளது. 100 பதக்கங்கள் என்ற குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியதில் இந்திய மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்தியாவிற்கான இந்த வரலாற்று சாதனைக்கு வழிவகுத்த நமது விளையாட்டு வீரர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பிரமிக்க வைக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் சரித்திரம் படைத்து, நம் இதயங்களை பெருமையால் நிரப்பியது.
வரும் 10 ஆம் தேதி ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற நமது விளையாட்டு வீரர்களுடன் உரையாடுவதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.







