நவீன உள்கட்டமைப்பில் 100 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்யும் நோக்கத்துடன் இந்தியா முன்னேறி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் நகரில் 18 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான தேசிய வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், டெல்லி-டேராடூன் பொருளாதார வழித்தடத்தால், பயண நேரம் பாதியாக குறைக்கப்படும் என்றார்.
கடந்த 5 ஆண்டுகளில் உத்தரகாண்ட் மாநிலத்தின் வளர்ச்சிக்காக ஒரு லட்சம் கோடிக்கு மேல் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இன்றைய வளர்ச்சித் திட்டங்களில் 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். நவீன உள்கட்டமைப்பில் 100 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்யும் நோக்கத்துடன் இந்தியா முன்னேறி வருவதாகவும் பிரதமர் மோடி கூறினார்.
முன்பு மத்தியில் ஆட்சி செய்தவர்கள் எல்லை பகுதிகளில் பாலம் , சாலைகள் அமைப்பது உள்ளிட்ட உள்கட்டமைப்புகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்ற பிரதமர், தற்போதைய மத்திய அரசின் தாரக மந்திரம் தேசமே முதன்மை, நாட்டின் வளர்ச்சியே முதன்மை என்றார். அதேபோல நமது நாட்டின் பாதுகாப்பை சீர்குலைக்க நினைக்கும் தீவிரவாதிகளுக்கு உடனடி தக்க பதிலடி கொடுப்பது நமது முதன்மையான ஒன்று என்றும் கூறினார்.








