‘இந்தியா’ கூட்டணி 2024 மக்களவைத் தோ்தலில் வெல்ல வேண்டும் என்பதே ஒரே நோக்கம் என்றும் கூட்டணியில் எந்த பதவியையும் கோருவது அல்ல என்றும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானா்ஜி தெரிவித்தாா்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் ஜூன் 24-ம் தேதி பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது ஆலோசனை கூட்டம் ஜூலை 17 மற்றும் 18 தேதிகளில் பெங்களூரூவில் நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மக்களவைத் தோ்தலில் பாஜக கூட்டணியை எதிா்கொள்வதற்காக, காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 26 எதிா்க்கட்சிகள் ஒருங்கிணைந்து, ‘இந்தியா’ என்ற பெயரில் புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளன. இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் பொதுக் கூட்டத்தில், முதலமைச்சர் மம்தா பானா்ஜி கலந்துகொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
“26 அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து, கூட்டணி அமைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ‘பாரதம் வெல்லும்’ என்பதே இனி எங்களின் முழக்கம். அடுத்தகட்ட திட்டங்கள், ‘இந்தியா’ கூட்டணியின்கீழ் முன்னெடுக்கப்படும். மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்து பாஜகவை அப்புறப்படுத்தி, அமைதியான தேசத்தை உருவாக்க வேண்டும் என்பதே எங்களது விருப்பம். மாறாக, எந்தப் பதவி குறித்தும் கவலைப்படவில்லை.
2024 மக்களவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்று, ஆட்சியைத் தக்கவைத்தால், அதன் பிறகு நாட்டில் நிச்சயம் ஜனநாயகம் இருக்காது. எனவே, ஆட்சி அதிகாரத்தில் இருந்து பாஜக தூக்கியெறியப்பட வேண்டும்.
‘இந்தியா’ கூட்டணி மற்றும் மேற்கு வங்கம் சாா்பில் மணிப்பூா் மக்களுக்கு எனது ஆதரவை தெரிவிக்கிறேன். மணிப்பூரில் நடைபெறும் அராஜகங்கள் கடும் கண்டனத்துக்குரியவை. மணிப்பூா் பெண்களின் நிலைமை, அவா்கள் மீதான ஆளும் பாஜக அரசின் கொள்கைகளைப் பிரதிபலிக்கிறது.
எதிா் வரும் தோ்தல்களில் நாட்டின் மகள்களும் தாய்மாா்களும் பாஜகவுக்கு உரிய பாடம் கற்பிப்பாா்கள். நாட்டை பிளவுபடுத்த முயற்சிப்பதற்கு பதிலாக, விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த மத்திய பாஜக அரசு முயல வேண்டும். மேற்கு வங்கத்திலும் ராஜ்வன்ஷி, கமதாபுரி இனக் குழுக்களிடையே பிளவை ஏற்படுத்த பாஜக விரும்புகிறது. வன்முறையைத் தூண்டி, மாநிலத்தைப் பிரிக்க அக்கட்சி திட்டமிடுகிறது”
இவ்வாறு மம்தா பானர்ஜி பேசினார்.