நாட்டின் 76 -ஆவது சுதந்திர தின ஆகஸ்ட் 15ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஒத்திகை சென்னையில் இன்று தொடங்கியது.
76 -ஆவது சுதந்திர தினவிழா ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்கான விழா சென்னை கோட்டை கொத்தளத்தில் நடைபெறுகிறது. சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடி ஏற்றுகிறார். இதனை முன்னிட்டு 4, (இன்று) 10 மற்றும் 13 ஆம் தேதிகளில் சுதந்திர தின விழா ஒத்திகை நடைபெறுகிறது. இந்த நாட்களில் காலை 6 மணி முதல் அந்த பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், நேப்பியர் பாலம் முதல் போர் நினைவுச் சின்னம் வரை உள்ள காமராஜர் சாலை, போர் நினைவுச் சின்னத்திலிருந்து இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்கு பகுதி வரை உள்ள ராஜாஜி சாலை மற்றும் கொடிமரச் சாலை ஆகிய சாலைகளில் அனைத்து வாகன போக்குவரத்தும் தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமை செயலகம் அமைந்துள்ள காமராஜர் சாலையில் முதல்நாள் ஒத்திகை இன்று நடைபெற்று வருகிறது. சுதந்திர தின நிகழ்ச்சியில் முதலமைச்சரை காவல்துறை வாகன அணிவகுப்புடன் அவரது இல்லத்திலிருந்து அழைத்து வருவது போன்ற ஒத்திகை மேற்கொள்ளப்படுகிறது. தொடர்ந்து கமாண்டோ படை, குதிரைப்படை, பெண் காவலர்கள் உள்ளிட்ட 7 படைப்பிரிவினரின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டு தேசிய கொடியை ஏற்றுவது போன்ற ஒத்திகை நடைபெறுகிறது.





