IND vs SL ஒருநாள் தொடர் | 110 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது இலங்கை அணி!!

IND vs SL ஒருநாள் தொடரில்  2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது இலங்கை அணி அசத்தியுள்ளது. இலங்கை சென்றுள்ள இந்திய அணி, சூர்யகுமார் யாதவ் தலைமையில் முதலில் விளையாடிய டி20 தொடரை 3-0…

IND vs SL ஒருநாள் தொடரில்  2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது இலங்கை அணி அசத்தியுள்ளது.

இலங்கை சென்றுள்ள இந்திய அணி, சூர்யகுமார் யாதவ் தலைமையில் முதலில் விளையாடிய டி20 தொடரை 3-0 என கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது. அடுத்து, ரோகித் தலைமையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் மோதி வருகிறது. கொழும்புவில் கடந்த ஆக. 2-ம் தேதி நடந்த முதல் போட்டி, எத்தரப்புக்கும் வெற்றி தோல்வியின்றி சரிசமனில் முடிந்தது. தொடர்ந்து, 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இலங்கை இந்தியா அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று (ஆக. 7) நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக பதும் நிசங்கா – பெர்னாண்டோ களமிறங்கினர். இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 89 ரன்கள் குவித்தது. நிசங்கா 45 ரன்னில் ஆட்டமிழந்தார்.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பெர்னாண்டோ சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 96 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் அசலங்கா 10, சதீரா 0, ஜனித் லியனகே 8, துனித் வெல்லலகே 2 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். ஒரு முனையில் பொறுப்புடன் விளையாடிய குசல் மெண்டீஸ் 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 248 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் ரியான் பராக் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த நிலையில் 249ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர். ரோஹித் ஷர்மா அடித்து விளையாடிய நிலையில் முதல் விக்கெட்டாக சுப்மன் கில் வெளியேறினார். இதனைத் தொடர்ந்து ரோகித் சர்மாவும் 35ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இதனைத் தொடர்ந்து ரிஷப் பந்த் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க நிலைத்து ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி எல்பிடபில்யூ ஆகி வெளியேறினார். இதனைத் தொடர்ந்து இந்திய அணியில் வாஷிங்க்டன் சுந்தரைத் தவிர்த்து பிற வீரர்கள் அனைவரும் ஒர் இலக்க ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆகினர். 26.1 ஓவர்களிலேயே 138ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்து 110 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியைத் தழுவியது.

முதல் போட்டி சமனில் முடிவடைந்த நிலையில் இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டியில் இலங்கை வெற்றி பெற்றதன் மூலம் 2-0 என்ற கணக்கில் இலங்கை அணி தொடரைக் கைப்பற்றியது

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.