பிஎஸ்சி செவிலியர் படிப்புக்கான தேவையும், வேலைவாய்ப்பும் பன்மடங்கு அதிகரித்துள்ளது. 11 செவிலியா் கல்லூரிகளுக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாநகராட்சி, பெருமாள்புரத்தில் துணை செவிலியா் பயிற்சிப் பள்ளி, துணை சுகாதார நிலையக் கட்டடம் மற்றும் நகர பொது சுகாதார ஆய்வகம் உள்ளிட்டவைகளின் திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு சட்டப் பேரவைத்தலைவா் மு.அப்பாவு தலைமை வகித்தார்.
இதில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், மாநகராட்சி ஆணையர் சிவகிருஷ்ணமூா்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனா். சட்டமன்ற உறுப்பினர்கள் நயினாா்நாகேந்திரன், பாளையங்கோட்டை அப்துல்வஹாப் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மேலும் மக்களவை தொகுதி உறுப்பினர் ஞானதிரவியம், சட்டப்பேரவை முன்னாள் தலைவர் ஆவுடையப்பன், மேயர் சரவணன், துணைமேயர் ராஜூ, பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய தலைவர் தங்கபாண்டியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கட்டடங்களை திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர் கூறியதாவது:
“திருநெல்வேலியில் ரூ.1.82 கோடி மதிப்பிலான கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 6 செவிலியா் பயிற்சி கல்லூரிகளின் கீழ் மட்டுமே அரசு சாா்பில் பிஎஸ்சி செவிலியர் படிப்பு அளிக்கப்பட்டு வருகிறது. அந்த படிப்புக்கான தேவையும், வேலைவாய்ப்பும் பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் பல லட்சம் செலவு செய்து தனியாா் நிறுவனங்களில் படிக்கும் நிலை உள்ளது.
அதை தடுக்கும் வகையில் மத்திய அரசிடம் போராடி 11 செவிலியா் கல்லூரிகளுக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. அரசு மருத்துவ கல்லூரிகள் இல்லாத தென்காசி, மயிலாடுதுறை, ராணிபேட்டை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மேலும் 6 மாவட்டங்களில் உருவாக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருகிறாா். மத்திய அரசிடம் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் புதிய கல்லூரிகளுக்காகவே பேச்சு நடத்தப்படுகிறது.
உடல் உறுப்புகள் தானத்தில் தமிழ்நாடு முதலிடம் வகித்து வருகிறது. கொரோனாவுக்கு பின்பு மாரடைப்புகளால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை உலகளவில் அதிகரித்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார நிறுவனமும் அறிவுறுத்தியுள்ளதோடு, ஆய்வுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில்கூட இளைஞா்கள் கூட மாரடைப்பால் பாதிக்கப்படுகிறார்கள்.
கிராமப்புறங்களில் மாரடைப்பு அறிகுறியுடன் சுகாதார நிலையங்களுக்கு வருவோர் மேல் சிகிச்சைக்காக நகா்ப்புறங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். அதற்கு இடைப்பட்ட காலத்தில் நோயின் தீவிரம் அதிகரித்து உயிரிழப்பு ஏற்படுகிறது. இந்த அபாயத்தை தடுக்கும் வகையில் இதயம் காப்போம் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது.
இதன்படி, தமிழ்நாட்டில் உள்ள 873 துணை சுகாதார நிலையங்கள், 2286 ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாரடைப்பை தற்காலிகமாக தடுக்கும் மாத்திரைகளை இருப்பு வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மக்களைத் தேடி மருத்துவம், மகப்பேறு காலத்தில் தாய்-சேய் உயிரிழப்பு தடுப்பு போன்றவற்றில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் வள்ளியூா், அம்பாசமுத்திரத்தில் மாவட்ட தலைமை மருத்துவமனைகள், கண்டிகைப்பேரி அரசு மருத்துவமனை உள்ளிட்டவற்றில் பலகோடி மதிப்பில் பணிகள் நடைபெற உள்ளன” இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார்.







