கொரோனா தொற்று மீண்டும் பல மாநிலங்களில் அதிகரிக்க தொடங்கியதால், தமிழ்நாட்டி தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
இந்தியாவில் கொரோனா தொற்று மற்றும் உருமாறிய தொற்று வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக வடமாநிலங்களில் தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் அனைத்து மாநிலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, மகாராஷ்டிரா, கர்நாடகா மாநில அரசுகளுக்கு, மத்திய சுகாதாரத் துறை கடிதம் எழுதியுள்ளது. அதில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதை கட்டுப்படுத்த முறையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டிருந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், தமிழ்நாட்டில் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில், அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் முறையான அறிவிப்பு வழங்கி கொரோனா அலை மீண்டும் ஏற்படாத வகையில் அறிவுறுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது, தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
மேலும் நாளை தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுவது குறித்தும் துறை சார்ந்த அதிகாரிகளிடம் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். அதற்கான வழிமுறைகள் குறித்தும் முதலமைச்சர் ஆலோசனை வழங்கினார். இந்த கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.
– இரா.நம்பிராஜன்