அரசு மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெறுவோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டிலிருந்து 5 சதவிகிதம் குறைக்கப்பட்டிருப்பதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் மேம்படுத்தப்பட்ட அவசரகால ஊர்தி
மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியின் போது மேடையில் உரையாற்றிய அமைச்சர், அரசு மருத்துவமனைகளில் அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தை பெறுவோரின் சதவிகிதம் 43 லிருந்து 38 ஆக குறைக்கப்பட்டிருப்பதாக கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும் அரசு மருத்துவமனைகளில் 100 சதவிகிதம் சுகபிரசவங்கள் மூலம் குழந்தைகளை பெற்றெடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அமைச்சர் கூறினார். தாங்கள் விரும்பும் தலைவர்கள், முன்னோர்கள் பிறந்த நாளில் குழந்தை பிறந்தால் நன்றாக இருக்கும் என கருதி அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை பெற்றெடுப்பது அந்த குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கும் என்பதை பெற்றோர்களுக்கு அறிவுறுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதி பிறந்தநாளில் நடைபெற்ற மாராத்தான் போட்டியின் போது, பதிவுக் கட்டணமாக ஒரு கோடியே 22 லட்சம் வந்ததாகவும், அதோடு அரசு வழங்கிய 2 கோடியே 44 லட்ச ரூபாய் என மொத்தமாக சேர்த்து 3 கோடியே 66 லட்ச ரூபாய் மதிப்பில் இந்த மருத்துவமனையில் குழந்தைகளை அனுமதிக்கும் பெற்றோர்கள்
வசதிக்காக தங்கும் அறை கட்டும் பணி திங்கட்கிழமை தொடங்கும் என்ற அறிவிப்பையும் அமைச்சர் வெளியிட்டார். அறையில் தங்கும் பெற்றோர்களுக்கு மூன்று வேளை உணவும் விலையில்லாமல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் உறுதியளித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், அரசு மருத்துவமனைகளில் அதிகளவு படுக்கைகள் கொண்ட மாநிலமாக தமிழகம் திகழ்வதாகவும், தனியார் மருத்துவமனைகளுக்கு நிகராக அரசு மருத்துவமனைகளில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுவதாகவும் கூறினார்.
எந்தவித திட்டமிடலும் இல்லாமல் அம்மா உணவகம் தொடங்கப்பட்டதாகவும், இருப்பினும் அதனை பயன்படுத்தும் ஏழை, எளிய மக்களுக்காக தொடர்ந்து நடத்திட வேண்டும் என்ற உத்தரவின்படி இயங்கி வருவதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.