தமிழகத்தில் மின்கட்டணம் உயர்த்தியுள்ளதற்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தேமுதிக தலைவர் விஜயகாந்த், வி.கே.சசிகலா உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் மின்கட்டணம் உயர்த்துவதாக நேற்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கடும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்து வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுகுறித்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் மக்கள் மீது ஏற்கனவே சொத்து வரியை உயர்த்தி சுமை ஏற்றிய விடியா அரசு தற்போது மின் கட்டணத்தையும் உயர்த்தி மக்கள் தலையில் கடும் சுமையை சுமத்தியுள்ளது கடும் கண்டனத்துக்குரியது என பதிவிட்டுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தில் 8 ஆண்டுகளுக்கு பிறகு மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்திருக்கிறார். வாக்களித்த தமிழக மக்களுக்கு இந்த அரசு சிறந்த அரசாக இருக்க வேண்டும். பல வாக்குறுதிகளை அள்ளி வீதி ஆட்சியில் அமர்ந்துள்ள திமுக தற்போது விலைவாசி உயர்வுக்கு வழி வகுக்கின்ற அரசாக மக்களை வாட்டி வதைக்கிறது. ஏற்கனவே கடுமையான விலைவாசி உயர்வால் மக்கள் அவதிப்பட்டு வரும் நேரத்தில் மின் கட்டணத்தை உயர்த்துவது மக்களை மேலும் துன்பத்தில் ஆழ்த்துவதாகும். நகர்ப்புறங்களில் பெரும்பாலான வீடுகளில் மாதம் 300 யூனில் என்பது சாதாரணம். இதுமட்டுமல்லாமல் வாடகை வீடுகளில் வசிக்கும் மக்கள் கூடுதல் மின்சார கட்டணத்திற்கு ஆளாக்கப்படுவார்கள்.
இந்த மின்கட்டண உயர்வு வாடகை உயர்வுக்கு வழிவகுக்கும். சாமானிய மக்களை பாதிக்கும் இந்த மின்கட்டண உயர்வுக்கு தேமுதிக கட்டணம் தெரிவிப்பதோடு தமிழக அரசு இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் வி.கே.சசிகலா விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தில் ஏற்கனவே விலைவாசி உயர்வு, சொத்துவரி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், கொரோனா போன்ற பிரச்னைகளால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நேரத்தில் திமுக அரசு மக்களை வஞ்சிக்கும் விதமாக மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது மன்னிக்க முடியாதது. இதை தான் திராவிட மாடலாக கருதுகிறார்களா? என்றும் தெரியவில்லை. தமிழகத்தில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு திமுக அரசு மின்கட்டணத்தை உயர்த்தும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும் என்று வலியுறுத்துவதாக தெரிவித்துள்ளார்.