டெல்லி பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து 3வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பான விசாரணையின் போது, அந்த மாநில முதலமைச்சராக இன்றைய பிரதமர் நரேந்திர மோடி இருந்தார். அப்போது முஸ்லிம்களின் நிலை குறித்து ”இந்தியா: மோடி மீதான கேள்வி” என்ற ஆவணப் படத்தை கடந்த ஜனவரி மாதம் 17-ம் தேதியும் பிபிசி நிறுவனம் லண்டனில் ஒளிபரப்பியது. இதன் இரண்டாம் பாகம் கடந்த 24ம் தேதி வெளியானது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த ஆவணப்படத்தை வெற்றுப் பிரசாரம் என்று மத்திய அரசு நிராகரித்தது. மேலும் தவறான கருத்துக்கள் பரப்படுவதாக கூறி இந்த ஆவணப்படத்தை தடை செய்தது. மேலும் தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021ன் கீழ் அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தி பதிவுகளை அகற்றுவதற்கு தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம், யூடியூப் மற்றும் ட்விட்டர் ஆகிய நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், டெல்லியில் உள்ள பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை 3வது நாளாக இன்றும் தொடர்ந்து நடந்து வருகிறது.
நிதித்துறை தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக சோதனை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் வரி விதிப்பு மற்றும் நிதி பரிவர்த்தனை தொடர்பான விவரங்களை சேகரிக்க ஊழியர்களின் செல்போன்கள், லேப்டாப்கள், அலுவலக பயன்பாட்டில் உள்ள மின்னணு சாதனங்களில் சோதனை நடந்து வருகிறது. நிதி உள்ளிட்ட சில பிரிவு ஊழியர்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.