அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமானவரும், நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளருமான சந்திரசேகர் வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு நெருக்கமான இவர், கோவை அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் பொறுப்பில் இருந்து வருகிறார். அதிமுகவின் அதிகாரபூர்வ நாளிதழான நமது அம்மாவின் வெளியீட்டாளராகவும் இருந்து வருகிறார். வேலுமணி உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது, ஒப்பந்தம் உள்ளிட்ட விஷயங்களில் தலையிட்டதாக சந்திரசேகர் மீது திமுக மற்றும் அறப்போர் இயக்கம் புகார் அளித்திருந்தது.
அதன் அடிப்படையில் வேலுமணி, அவர் சகோதரர் அன்பரசன், சந்திரசேகர் உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் வழக்குப் பதிவு செய்தது. தொடர்ந்து கடந்தாண்டு மற்றும் கடந்த மார்ச் மாதம் அதிகாரிகள் வேலுமணி, சந்திரசேகர் சம்மந்தப்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர். இந்நிலையில் இன்று காலை முதல் சந்திரசேகர் சம்பந்தப்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
வடவள்ளியில் உள்ள சந்திரசேகர் வீடு, அவரின் தந்தை வீடு உள்ளிட்ட 6 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வடவள்ளியில் உள்ள அவர் வீட்டில் மட்டும் சுமார் 8 அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சந்திரசேகரின் மனைவி சர்மிளா கோவை மாநகராட்சி 38வது வார்டு கவுன்சிலராக இருந்து வருகிறார். அதிமுக பொதுக் குழுவுக்கு உச்ச நீதிமன்றம் தடை இல்லை என அறிவித்த நிலையில், எடப்பாடி பழனிசாமி அணியில் உள்ள வேலுமணிக்கு நெருக்கமானவரின் இடத்தில் நடக்கும் வருமான வரித் துறை சோதனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-ம.பவித்ரா







