பேரூர் பட்டீஸ்வரர் கோவில் யானைக்கு குளியல் தொட்டி திறப்பு

கோவை பேரூர் பட்டீசுவர சுவாமி திருக்கோவிலில் உள்ள யானைக்கு புதிதாக கட்டப்பட்ட குளியல் தொட்டியை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு திறந்து வைத்தார். இதையடுத்து, பேரூர் ஆதினத்தில் நடந்த அர்ச்சகர்…

கோவை பேரூர் பட்டீசுவர சுவாமி திருக்கோவிலில் உள்ள யானைக்கு புதிதாக கட்டப்பட்ட குளியல் தொட்டியை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு திறந்து வைத்தார்.

இதையடுத்து, பேரூர் ஆதினத்தில் நடந்த அர்ச்சகர் மற்றும் ஓதுவார் பயிற்சிப் பள்ளி மாணவர்களுக்கு சிவதீட்சை வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர் பாபு கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் சேகர் பாபு கூறியதாவது, 84 அர்ச்சகர்கள் மற்றும் ஓதுவார்களுக்கு தீட்சிதை அளித்தது மகிழ்ச்சியளிக்கிறது. கடந்த 2006ஆம் ஆண்டில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அர்ச்சகர் பயிற்சி பள்ளிகள் துவக்க அரசாணை வெளியிட்டார். பின்னர் 2007ம் ஆண்டு அர்ச்சகர் பயிற்சி பள்ளிகள் துவங்கப்பட்டதன. கடந்த காலங்களில் பள்ளிகள் மாணவர்கள் பயிற்சி பெற தரம் இல்லாத நிலை இருந்தது.

இந்த பள்ளிகளை மேம்படுத்தவும், புதிய பள்ளிகள் துவக்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டதை தொடர்ந்து, 5 நிலையில் பயிற்சி பெற 15 பள்ளிகள் துவங்கப்பட்டன. அப்பள்ளிகளில் 210 பேர் பயிற்சி பெற்று வருகின்றனர். எங்கும் தமிழ் மணம் மகிழவும் ஆன்மிகத்தில் தமிழகம் முதன்மை பெறவும் இந்த நிகழ்ச்சி உதாரணமாக உள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள 27 திருக்கோவிலில் 29 யானைகள் பராமரிக்கப்படுகின்றன.

அந்த யானைகளுக்கு குளியல் தொட்டிகள், நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவர் பரிந்துரைப்படி உணவு வழங்கப்படுகிறது. இந்த அரசு மனிதர்கள், யானைகள் நலன் காக்கும் அரசாக உள்ளது. இந்து சமய அறநிலையத் துறையில் இருந்த தொய்வான நிலையை அகற்றி, பக்தர்களின் அடிப்படை தேவைகளை அரசு நிறைவேற்றி வருகிறது எனத் தெரிவித்தார்.

அமைச்சர் சேகர்பாபு பழநி தண்டாயுதபாணி திருக்கோவில் கருவறைக்குள் அத்துமீறி நுழைந்ததாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, ஊடகங்களில் வர வேண்டும் என்பதற்காக விஷமத்தனமான செய்திகளை வெளியிடுவது தான் அவரது வாடிக்கையாக உள்ளது. வெளிநாட்டில் இருப்பவர்களும் பாராட்டும் வகையில் சிறப்பாக கும்பாபிஷேகம் நடந்தது. அதில் கரும்புள்ளி ஏற்படுத்த வேண்டும் என அர்த்தமற்ற செய்தியை வெளியிட்டது மிகவும் வருத்தமளிக்கிறது. அனைவரும் சமம் என்ற நிலையை உருவாக்கியதாலும் திருக்கோவிலை வைத்து வருமானம் பார்ப்பவர்களை முடக்கியதாலும் தேவையற்ற செய்திகள் வெளியிடப்பட்டு வருகிறது என்றார்.

மேலும், பழநிக்கு பெருந்திட்ட வரைவு தயார் செய்யப்பட்டுள்ளது. அதற்கு முதலமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார். யானைகள் புத்துணர்வு முகாம் தேவையற்ற ஒன்றாகிவிட்டது. கோவில்களிலேயே யானைகளுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது. சிவராத்திரி விழா ஏற்பாடுகள் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. 5 இடங்களில் வெகுவிமர்சையாக நடைபெற உள்ளது. மருதமலை கோவில் அறங்காவலர் விரைவில் நியமனம் செய்யப்படுவார். 17 திருக்கோவில்களுக்கு அறங்காவலர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

விரைவில் அனைத்து கோவில்களிலும் அறங்காவலர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். கோவில்களில் சிறப்பு கட்டணம் ரத்து செய்யும் நிலையில், பூஜை உள்ளிட்டவை பாதிக்காத நிலையில் செய்யப்படும். சிறப்பு கட்டணத்தை படிப்படியாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மருதமலை கோவிலில் லிஃப்ட் அமைக்க டெண்டர் முடிந்துள்ளது. அடுத்த மாதம் பணிகள் துவக்கப்படும் என்றார்.

-ம.பவித்ரா

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.