ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.
கேரள மாநிலத்தின் பாரம்பரிய சிறப்புமிக்க ஓணம் பண்டிகை அனைத்து மக்களாலும் கொண்டாடப்படுகிறது. அறுவடை திருநாள் என அழைக்கப்படும் ஓணம் பண்டிகையை அம்மக்கள் சாதி, மத வேறுபாடின்றி வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.
இதனை ஒட்டி, அரசு அலுவலகங்கள், கல்லூரிகள், பள்ளிகள், தனியார் அலுவலங்களிலும் ஓணம் கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி சபரிமலை ஐயப்பன் கோயிலை திறக்கவுள்ளார். ஆகஸ்ட் 29 ஆம் தேதியன்று திருவோண தினத்தில் சிறப்பு பூஜைகள் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓண சத்யா எனப்படும் அறுசுவை விருந்து மற்றும் மாற்று சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. அதோடு, ஆன்லைனில் முன் பதிவு செய்த பக்தர்களுக்கு நாளை முதல் அனுமதி வழங்கப்படுகிறது.
இன்று மாலை முதல் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை சபரி மலை ஐயப்பன் கோயில் நடை திறந்திருக்கும் நிலையில், அன்று இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.







