புதுக்கோட்டையில் தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்
சங்க மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில தலைவர் அன்பரசன்,
மாநில பொதுச் செயலாளர் மாரிமுத்து, முன்னாள் மாநில பொதுச் செயலாளர் சாமி
சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர்
பதிவு உயர்வில் 40 சதவீதம் முதல் 50 சதவீதமாக உயர்த்தி பதவி உயர்வு வழங்க
வேண்டும்.
அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் துப்புரவாளர்கள் மற்றும்
இரவு காவலர்கள் உடனடியாக நியமனம் செய்ய வேண்டும். அனைத்து அரசு உயர்நிலைப்
பள்ளிகளிலும் 8 பட்டதாரி ஆசிரியர்கள் பணியமற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட
பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநில தலைவர் அன்பரசன் கூறியதாவது:
மாணவர்களின் நலன் கருதி தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக ஒரு நிலையான
வழிகாட்டு நெறிமுறைகளை அறிவிக்க வேண்டும்.
பள்ளிக் கல்வித் துறையில் நிலவிவரும் பல்வேறு குளறுபடிகளை கண்டித்தும்
பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் மற்றும் அமைச்சர் முரண்பட்ட கருத்துக்களை கூறி
வருவதை உடனடியாக முதல்வர் தலையிட்டு தீர்வு காண வேண்டும்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 28ஆம் தேதி சென்னையில் மாநில அளவில் ஆர்பாட்டம் நடைபெற உள்ளது.
மாணவர்களை அன்பாக நடத்த வேண்டும் என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு. சில
பகுதிகளில் ஆசிரியர்கள் மீது பல்வேறு புகார்கள் அரசுக்கு பெறப்பட்டு காவல்துறை
மூலமாகவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. உண்மையாக இருக்கும் குற்றச்சாட்டுகள் மீது தகுந்த ஆதாரங்கள் இருந்தால் உறுதியாக நடவடிக்கை எடுக்க
வேண்டும் சில பகுதிகளில் வேண்டுமென்றே பொய்யான குற்றச்சாட்டுகளை ஆசிரியர்கள் மீது வைக்கின்றனர் என்று அன்பரசன் தெரிவித்தார்.








