’காசாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்துக’ – நெதன்யாகுவுக்கு எதிராக இஸ்ரேல் மக்கள் போரட்டம்!

காசாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் எஞ்சியுள்ள பணயக்கைதிகளை மீட்டுவரக் கோரியும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக தலைநகரில் மக்கள் போரட்டம் நடத்தியுள்ளனர்.

கடந்த அக்டோபர் 7, 2023 அன்று பாலஸ்தீன விடுதலை ஆதரவு இயக்கமான ஹமாஸ் இஸ்ரேல் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 1200 பேர் கொல்லப்பட்டனர். மேலும்  251 பேர் ஹமாஸால், பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் காசா மீது தாக்குதலைத் தொடங்கியது. இந்த தாக்குதலில் இதுவரை காசாவைச் சேர்ந்த 61 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் உணவு கிடைக்காமலும், ஊட்டச் சத்து குறைபாட்டாலும் காசாவில்  உயிரிழப்பவா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சர்வதேச நாடுகள் இஸ்ரேலை கடுமையாக விமர்சித்து வருகின்றன. ஆனாலும் இஸ்ரேல் தாகுதலை தொடர்ந்து வருகிறது.

கடந்த ஆகஸ்ட் 8ல் காசாவை முழுமையாகக் கைப்பற்றி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முன்மொழிவுக்கு அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதற்கு பிரிட்டன்  சீனா, துருக்கி,  உள்ளிட்ட நாடுகளும், கடும் கண்டனம் தெரிவித்தன. ஆனால் தற்போது இஸ்ரேலின் இந்த முடிவுக்கு உள்நாட்டிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இஸ்ரேல் அரசுக்கு எதிராக சனிக்கிழமை இரவு தலைநகர் டெல் அவிவ் வீதிகளில் ஏரளமான மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள, காஸாவில் உடனடியாக சண்டை நிறுத்தத்தை அமல்படுத்தவும், எஞ்சியுள்ள 50 பணயக்கைதிகளையும் மீட்டுக்கொண்டுவரவும் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் அவர்கள் போரை மேலும் தீவிரப்படுத்தாமல் இருக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.