உயர் சிறப்பு மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில், அரசு மருத்துவர்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தி.வேல்முருகன், வெளியிட்டுள்ள அறிக்கையில், “மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை மருத்துவப் பல்கலைக் கழகங்களில் உள்ள மருத்துவ இடங்களில் 50 விழுக்காடு இடங்களுக்கு, அந்தந்த மாநில அரசுகளின் மருத்துவக் கல்லூரிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்துக்கு இணையாக மட்டுமே வசூலிக்க வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, தமிழ்நாடு அரசு மருத்துவ கல்லூரிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணமான 13,650 ரூபாய் போன்றே, தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கும் நிர்ணயித்து தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட வேண்டும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையை நடத்துவதற்கு முன்பாகவே, இந்த கட்டண நிர்ணய ஆணையை ஒன்றிய, மாநில அரசுகள் வெளியிட்டால்தான், தனியார் மருத்துவ கல்லூரிகளில் ஏழை, எளிய மாணவர்கள் சேரமுடியும்.
அதே போன்று, உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டு என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை, நடப்பாண்டிலேயே அமல்படுத்த ஒன்றிய, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான மருத்துவ கல்லூரிகளில் உள்ள 100 விழுக்காடு, உயர்சிறப்பு மருத்துவ இடங்களையும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கே வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.
மேலும், தமிழ்நாடு உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்ணயிக்கப்படும் கட்டணங்களை கண்காணிப்பதற்கு, பணியில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழுவை அமைக்க தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது” என அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.