“எனது 3 படங்களும் மக்களிடம் வரவேற்பைப் பெற்றிருப்பது மகிழ்ச்சி”

“சமீபத்தில் வெளியாகிய தேஜாவு, டி பிளாக், டைரி ஆகிய எனது 3 படங்களும் மக்களிடம் வரவேற்பைப் பெற்றிருப்பது மகிழ்ச்சி” என்று இளம் நடிகர் அருள்நிதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: என்…

“சமீபத்தில் வெளியாகிய தேஜாவு, டி பிளாக், டைரி ஆகிய எனது 3 படங்களும் மக்களிடம் வரவேற்பைப் பெற்றிருப்பது மகிழ்ச்சி” என்று இளம் நடிகர் அருள்நிதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

என் சமீபத்திய திரைப்படம் ‘டைரி’ பெற்றிருக்கும் வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. டைரி ஸ்க்ரிப்டின் மீது நம்பிக்கை வைத்ததற்காகவும், அது உயர்ந்த தரத்தில் திரைப்படமாக மாற காரணமாக இருந்ததற்காகவும் தயாரிப்பாளர் கதிரேசன் சார் அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஓர் இயக்குனராகவும் எழுத்தாளராகவும் சிறப்பாகப் பணியாற்றி ஜெயித்திருக்கும் இயக்குனர் இன்னாசி பாண்டியனுக்கும் என் நன்றிகள். என் நண்பரும் ஒளிப்பதிவாளருமான அரவிந்த் சிங், இசையமைப்பாளர் ரான் ஈத்தன் யோஹன், சக நடிகர்கள், டெக்னிஷியன்கள் மற்றும் இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

உதய் அண்ணனுக்கும் அவரது நிறுவனத்தைச் சேர்ந்தவர்களுக்கும் நான் மிகுந்த கடமைப்பட்டிருக்கிறேன். அண்ணனின் மதிப்புமிகு நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூலம் இப்படம் இவ்வளவு சிறப்பாக வெளியானதும், மிக அதிகப் பார்வையாளர்களைச் சென்றடைந்ததும் அவர்களால்தான்.

ரெட் ஜெயண்ட் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டு வெற்றி பெற்ற படங்களின் நீண்ட பட்டியலில் டைரியும் இடம்பெற்றிருப்பது பெருமையாக இருக்கிறது.

டி பிளாக், தேஜாவு, டைரி என என் சமீபத்திய மூன்று படங்களும் கடந்த இரண்டு மாதங்களுக்குள் அடுத்தடுத்து வெளியாகின. இந்த அடுத்தடுத்த ரிலீஸ்கள் திட்டமிடப்படாமல் ஏதேச்சையாக நடந்தவை. கடந்த ஓரிரண்டு ஆண்டுகளில் பெருந்தொற்று ஏற்படுத்திய லாக் டவுன்களின் காரணமாக குறைந்த இடைவெளியில் இப்படங்கள் திரையரங்குகளுக்கு வந்தன. ஆனாலும் மூன்றும் மக்களிடையே பாசிட்டிவான வரவேற்பைப் பெற்றதில் எனக்குக் கூடுதல் மகிழ்ச்சி.

எனது தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், திரையுலகினர், நண்பர்கள், சினிமா ரசிகர்கள், பொதுமக்கள், ஊடக நண்பர்கள், என் குடும்பத்தினர், மற்றும் என் வெற்றியிலும் வளர்ச்சியிலும் முக்கியப் பங்காற்றும் ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதே போன்ற சிறந்த படங்களைத் தொடர்ந்து தரும் வகையில் கண்டிப்பாக உழைப்பேன் என தெரிவித்துக் கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் நடிகர் அருள்நிதி குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.