சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு – இயக்குநர் அமீர் சிபிஐ நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்!

சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கின் விசாரணைக்கு திரைப்பட இயக்குநர் இயக்குனர் அமீர் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியுள்ளார்.

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக முன்னாள் நிர்வாகியும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக், சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி, அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து, கடந்த ஜூன் 26 ஆம் தேதி அவரை கைது செய்தது. பின்னர் அவரது சகோதரர் முகமது சலீமை ஆகஸ்ட் மாதம் கைது செய்தது.

இந்த வழக்கு விசாரணை சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. இந்த வழக்கின் 302 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையில், ஜாபர் சாதிக், அவரது மனைவி அமீனாபானு, ஜாபர் சாதிக் சகோதரர் முகமது சலீம் மற்றும் திரைப்பட இயக்குனர் அமீர் உள்ளிட்ட 12 தனி நபர்களும், ஜாபர் சாதிக்-கின் பட தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்ட எட்டு நிறுவனங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இவ்வழக்கு கூடுதல் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எழில் வேலவன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமீர் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள் நேரில் ஆஜராகினர். அமலாக்கதுறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், குற்றஞ்சாட்டப்பட்ட நோரோடின், அப்துல் ரஹீம் ஜின்னா, ஃபெரோஸ்கான் போஹரி, ஃபெரோஸ் கான் ஆகிய மூன்று பேர் முகவரி மாறியுள்ளனர்.

அதனால் அவர்களுக்கு சம்மன் சென்றடையவில்லை. எனவே இறுதி வாய்ப்பாக சம்மன் வழங்க வேண்டும். அடுத்த விசாரணைக்குள் அவர்கள் இல்லை என்றால் அது தொடர்பாக மனு தாக்கல் செய்வதாக தெரிவித்தார். வாதங்களை கேட்டறிந்த நீதிபதி விசாரணையை வருகிற பிப்ரவரி 7ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.