”அமைச்சர் சேகர்பாபு பதவி விலகாவிட்டால் போராட்டம்!” – பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை!

சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் சேகர்பாபு பதவி விலகாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். செப்டம்பர் 2ம் தேதி தமுஎகச சார்பில் சென்னையில் “சனாதன ஒழிப்பு மாநாடு’…

சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் சேகர்பாபு பதவி விலகாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

செப்டம்பர் 2ம் தேதி தமுஎகச சார்பில் சென்னையில் “சனாதன ஒழிப்பு மாநாடு’ நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் “ இந்த மாநாட்டிற்கு சனாதன எதிர்ப்பு மாநாடு என்று பெயர் வைக்கவில்லை. சனாதன ஒழிப்பு மாநாடு என மிகச் சரியாக வைத்துள்ளீர்கள்.  சனாதனத்தை எதிர்ப்பதை விட ஒழிப்பதுதான் சிறந்தது. எப்படி டெங்கு, மலேரியா மற்றும் கோவிட் போன்றவற்றையும் ஒழித்துள்ளோமோ அதே போல சாதி மற்றும் ஏற்றத் தாழ்வுககளை ஊக்குவிக்கும் சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும்” என பேசியிருந்தார்.

உதயநிதி ஸ்டாலினின் இந்த கருத்துக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட நாடு முழுவதும் பாஜகவினர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு குறித்தும், அந்த மாநாட்டில் பங்கேற்ற தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுக்கும் கண்டனம் தெரிவித்து தனது X பக்கத்தில்  பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் அண்ணாமலை கூறியுள்ளதாவது:

சனாதன ஒழிப்பு குறித்த கூட்டத்தில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசிய போது, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக உள்ள சேகர்பாபு அமைதி காத்துள்ளார். இதன்மூலம், இந்து சமய அறநிலையத்துறைக்கு அமைச்சராக தொடரும் தார்மீக உரிமையை சேகர்பாபு இழந்து விட்டர். வரும் 10-ம் தேதிக்குள் அவர் பதவி விலக வேண்டும், அப்படி சேகர்பாபு பதவி விலகவில்லை என்றால், வரும் 11-ம் தேதி போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.