அரசுப்பள்ளிகளை மேம்படுத்தாவிட்டால் தேசத்தின் வளர்ச்சி கேள்விக்குறியாகி விடும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
அரசுப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை பயின்று கலை, அறிவியல் கல்லூரிகள், பொறியியல், மருத்துவம், சட்டம், வேளாண்மை, கால்நடை மருத்துவம், பாலிடெக்னிக் உள்ளிட்ட உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
புதுமைப்பெண் என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த திட்டத்தின் விழா சென்னை ராயபுரத்தில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியில் இன்று நடைபெற்றது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் 26 தகைசால் பள்ளிகள் மற்றும் 15 மாதிரிப் பள்ளிகளும் தொடங்கி வைக்கப்பட்டவுள்ளன. இந்நிகழ்வில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
இதையடுத்து விழாவில் உரையாற்றிய டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆசிரியர் தின வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். சமுதாயத்தின் அடிப்படை ஆசிரியர்கள் தான் என்றும் புதுமைப் பெண் உட்பட கல்வித்துறையில் பல புதிய முன்னெடுப்புகளை எடுத்துவரும் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள் என்றும் கூறினார். இந்தியாவுக்கே வழிகாட்டும் புரட்சிகரமான திட்டம் தான் புதுமைப் பெண் திட்டம்.
புதுமைப் பெண் திட்டத்தை தொடங்கி வைக்க என்னை அழைத்தபோது உண்மையிலேயே ஆச்சர்யம் ஏற்பட்டது. ஒரு மாநில முதலமைச்சர், இன்னொரு மாநிலத்துக்கு சென்று பள்ளிகள், மருத்துவமனைகளை பார்வையிடுவதை இதுவரை கண்டதில்லை. ஆனால் அவ்வாறு தமிழ்நாட்டில் இருந்து டெல்லிக்கு வந்து பார்வையிட்டதோடு, அதேபோல் தமிழ்நாட்டிலும் அமைப்பேன் என்று சொல்லி, அதை இப்போது அமைத்தும் காட்டியிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று புகழாரம் சூட்டினார்.
டெல்லியைப் போல் தகைசால் பள்ளிகள், மாதிரிப் பள்ளிகள் தமிழ்நாட்டிலும் இன்று தொடங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு மாநில அரசும் நல்ல முன்னெடுப்புகளை எடுத்துவருகின்றன. ஒவ்வொரு மாநிலமும் பிற மாநிலங்களிடம் இருந்து நல்ல விஷயங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். பெரும்பாலான மாணவியர், திறமை இருந்தும், வறுமை காரணமாக தங்கள் படிப்பைக் கைவிடும் சூழல் உள்ளது. ஆனால் புதுமைப்பெண் திட்டம் மாணவியரின் இடைநிற்றலைத் தவிர்க்கும் புரட்சிகரமான திட்டம்.
இந்தியா முழுவதும் புதுமைப்பெண் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். டெல்லி, தமிழ்நாடு உட்பட சில மாநிலங்கள் தவிர நாடு முழுவதும் பெரும்பாலான அரசுப்பள்ளிகளின் நிலை கவலைக்குரியதாக உள்ளது. இந்தியாவில் 27 கோடி மாணவர்கள் உள்ளனர். இதில், 18 கோடி மாணவர்கள் அரசுப்பள்ளியில் படிக்கின்றனர். அரசுப்பள்ளிகளின் நிலைமை எப்படி உள்ளது என்று நமக்கு நன்றாக தெரியும். எனவே, பள்ளிகளை சீரமைத்து இந்தியாவில் கல்வியை நம்பர் ஒன்று என்ற நிலைக்கு எடுத்து செல்ல வேண்டும்.
அரசுப்பள்ளிகளை மேம்படுத்தா விட்டால், தேசத்தின் வளர்ச்சி கேள்விக்குறியே என குறிப்பிட்ட அவர், நல்ல தரமான, இலவசக் கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்தால் அடுத்த 5 ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த முடியும். அரசுப்பள்ளிகளை மூடினால் ஏழை, எளிய குழந்தைகள் கல்வி கற்க எங்கே செல்வர்? அப்படி இருந்தால் நாடு வளராது. எனவே, இனி கல்வி சார்ந்த புதிய திட்டங்களை தொடங்கும் போதும் மு.க.ஸ்டாலின் என்னை அழைப்பார் என்று நம்புகிறேன். நானும் புதிய திட்டங்களை தொடங்கி வைக்க டெல்லிக்கு வருமாறு மு.க.ஸ்டாலினை அழைப்பேன் என தெரிவித்தார்.
-இரா.நம்பிராஜன்