அனுமதி பெறாமல் கட்டிடங்கள் கட்டினால் அவை உடனடியாக இடித்து அகற்றப்படும் என அமைச்சர் சு.முத்துசாமி பேசியுள்ளார்.
ஈரோட்டில் மாற்றுத்திறனாளிகள் நிகழ்ச்சியில் பங்கேற்று பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, தமிழகத்தில் கட்டிட அனுமதி பெறும் நடவடிக்கைக்காக பில்டர்ஸ் அசோசியேசன், பொறியாளர்கள் சங்கம், ஆர்கிடெக்ட், பள்ளி கல்லூரிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினரிடம் கருத்துக்களைக் கேட்க இருக்கின்றோம் என்றார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், விதிமுறைகளில் நடைமுறை சிக்கல்கள் குறித்து எழுத்துப்பூர்வமாக அவர்களிடம் கருத்துக்களைப் பெற்று துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து பிரச்சனைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். இனிமேல் வரப்போகும் எந்த கட்டிடமும் வரைபட அனுமதி இல்லாமல் கண்டிப்பாக பார்த்து கொள்ள வேண்டியது கட்டிடப் பொறியாளர்களின் பொறுப்பு என கூறினார்.
அத்துடன், கட்டிட உரிமையாளர்களை விட கட்டிடப் பொறியாளர்களுக்கு தான் இந்த பொறுப்பு உள்ளது. கட்டிடம் கட்ட வரைபட அனுமதி தேவை என்பது பொதுமக்களுக்குத் தெரியவில்லை. இது குறித்து அவர்கள் கவலைப்படுவதும் இல்லை. கட்டிட வரைபட அனுமதி மிக முக்கியமானது. இது பொது மக்களுக்குப் பாதுகாப்பானது என்பதை அவர்கள் உணர வேண்டும் என கூறினார்.
மேலும், அனுமதி பெறாத கட்டிடங்கள் வரக்கூடாது என்பதற்காக பல்வேறு வழிமுறைகளை செய்திருக்கின்றோம். இதுகுறித்து பொதுமக்களிடமும் கொண்டு செல்வதற்கும் நடவடிக்கை எடுத்திருக்கின்றோம். ஏற்கனவே உள்ள விதிமீறிய கட்டுமானங்கள் குறித்து நீதிமன்றத்தில் இரண்டு மூன்று முறை உத்தரவுகள் வந்திருக்கின்றன என்றார்.
அத்துடன், இதையெல்லாம் மனதில் வைத்து மீண்டும் நீதிமன்றத்தை அணுகி இருக்கும் நிலையை எடுத்துச் சொல்லி அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கலாம் என நீதிமன்றத்திலேயே அனுமதி பெற்று நியாயமான தீர்வை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். இதில் ஒரு நபர் கூட பாதிக்கப்படக்கூடாது எனக் கருதுகின்றோம் என பேசினார்.
மேலும், நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்வதற்கு முன்பாக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியின் கருத்துக்களைக் கேட்டு அவர் மூலம் இதை எல்லாம் ஆய்வு செய்து அதன் பின்னர் நீதிமன்றத்தில் மனுவாகத் தாக்கல் செய்ய இருக்கின்றோம். அதே நேரம் இனிமேல் விதி மீறிய கட்டிடங்கள் வரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றோம். அவ்வாறு கட்டப்பட்டால் அதை மூடுவதற்கும் இடித்து அகற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் பேசினார்.