விளையாட்டுத்துறை மேம்பாட்டுக்காக பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவேன் என்று மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள தடகள வீராங்கனை பி.டி.உஷா தெரிவித்துள்ளார்.
சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் தனியார் கல்லூரி மாணவ மாணவியர் பங்கேற்ற மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதனை தடகள வீராங்கனையும், தற்போது மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள பி.டி.உஷா தொடங்கி வைத்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மாநிலங்களவை நியமன உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளது பெருமையாக உள்ளது என்றும் மகிழ்ச்சியாக உள்ளது என்றும் கூறினார். விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளை ஊக்கப்படுத்தும் வகையில் இது அமைந்துள்ளது என்றார்.
பிரதமர் மோடி இந்திய விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் அதிக பதக்கங்கள் பெறுவதற்காக அவர்களை நேரில் சந்தித்து ஊக்கப்படுத்தி வருகிறார் என்ற அவர், விளையாட்டு துறையின் மேம்பாட்டுக்காக தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவேன். விளையாட்டு துறையை மேம்படுத்துவதே எனது பணியாக இருக்கும் என்று தெரிவித்தார்.
நாங்கள் விளையாடிய காலத்தில் பெரிய அளவில் நிதி ஒதுக்கீடு விளையாட்டு துறைக்கு செய்யப்படவில்லை. தற்போது மத்திய அரசு விளையாட்டு துறைக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. நாடாளுமன்றத்தில் தனக்கு பேச வாய்ப்பளிக்கும் போது நிச்சயமாக விளையாட்டு துறை சார்ந்தே கோரிக்கைகளை முன்வைப்பேன் என பி.டி.உஷா தெரிவித்தார்.
– இரா.நம்பிராஜன்