நடிகர் அஜித்துடன் வேலை செய்ய வேண்டும் என ஆசை உள்ளதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
45 ஆண்டுகள் தமிழ் சினிமா உலகில் நிறைவு செய்த இயக்குனர் பாரதி ராஜாவுக்கு பாராட்டு விழா மற்றும் தமிழ் சினிமா திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு சென்னை வடபழனியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பாரதி ராஜாவுடன் மேடையில் அமர்ந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார். விக்ரம் படம் வெளிவந்த போது கூட பாரதிராஜா தன்னை கூப்பிடு பாராட்டினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிகழ்ச்சியை பொறுத்த வரை ஒரு விஷயத்தை சரியாக மக்களுக்கு கொண்டு சென்றது பத்திரிகையாளர்களே. உங்களுக்கு நான் நிறைய கடமைப்பட்டு உள்ளேன் என்றார். பாரதிராஜா படத்தில் நான் அதிகமாக பார்த்த படம் டிக் டிக் மற்றும் சிவப்பு ரோஜா தான். அந்த காலத்தில் மக்கள் இதை எப்படி ஏற்றுக்கொண்டனர் என்று நான் நடிகர் கமல்ஹாசனிடம் கேட்டேன், அதற்கு பாரதி ராஜா தான் காரணம் என்றும், எனக்கு நடிக்கும் ஆர்வம் இருந்ததால் கதையை பற்றி நான் யோசிக்கவில்லை என்று கமல் தெரிவித்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறினார்..
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த லோகேஷ் கனகராஜ், நான் சினிமா உலகில் மிகவும் ஜூனியர், தொடர்ந்து ஊடகத்தின் ஒத்துழைப்பு மட்டுமே காரணம் என்றார். எனது அடுத்த படம் எழுத ஆரம்பித்து விட்டேன், எனது அடுத்த படம் பற்றி புரெடக்ஷன் சார்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை சற்று காத்து இருங்கள் என்றார்.
ரஜனி மற்றும் கமலை வைத்து ராஜ் கமல் புரெடக்ஷனில் படம் எடுக்க போவதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, இது அவ்வளவு எளிதாக நடக்கும் விஷயம் இல்லை, ஆனால் நடந்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என்றார். மேலும் அனைத்து நடிகர்களுடன் படம் இயக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது, குறிப்பாக அஜித்துடன் வேலை செய்ய வேண்டும் என்று ஆசை உள்ளது, இது ஒரு பெரிய செயல், நேரம் வரும் பொழுது நடைபெறும் என்று நம்புகிறேன் என லோகேஷ் கனகராஜ் தெரிவித்தார்.
– இரா.நம்பிராஜன்