சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவின் வெற்றியை உணர்ந்து, மேலும் சில கட்சிகள் கூட்டணியில் இடம்பெறும், என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில், அதிமுக சார்பில் மீண்டும் ராயபுரம் தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமார் போட்டியிடுவதாக கட்சி தலைமை அறிவித்தது. இதனையடுத்து ராயபுரம் தொகுதியில், தனது தேர்தல் பிரச்சார பணிகளை மேற்கொண்டார். அவருக்கு அதிமுகவினர் பட்டாசுகள் வெடித்து வரவேற்பு அளித்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயகுமார், அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளுடன் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் உத்தரவில் குழு அமைக்கப்பட்டு கூட்டணி கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு பாமக, பாஜக கூட்டணி அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. மேலும் கூட்டணி கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. கூட்டணி கட்சிகளுடன் எந்தவித குளறுபடியும் இல்லை.
ஜாதி, மதம், மொழி, இனம் என எந்த பிரச்சனையும் இல்லாத மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. இஸ்லாமிய மதத்திற்கு எதிராக செயல்படும் கட்சி திமுக தான்.
அதிமுக ஆட்சியில் சிறுபான்மையினரிம் உரிமையும், உடமைகளும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
கம்யூனிஸ்ட் கட்சிகளை மிகுந்த பகுத்தறிவு கொண்ட கட்சியாக மதிக்கிறேன். ஆனால் காங்கிரஸ் முதலாளித்துவ கட்சி என கூறிய அவர்கள் தற்போது அதே திமுக, காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து பணியாற்றுகிறார். அவர்கள் கொள்கை இல்லாமல் செயல்படுகிறார்கள்.திமுக தலைமையிலான கூட்டணியில் பிரச்சனைகள் இருக்கலாமே தவிர, அதிமுக தலைமையிலான கூட்டணியில் எந்த பிரச்சனையும், கருத்து வேறுபாடும் இல்லை. கூட்டணி முழு உருவம் பெறும்போது கூட்டணி பலம் தெரியவரும்.
தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என்பதையறிந்து சிறுசிறு கட்சிகள் அதிமுகவின் கூட்டணிக்கு வருகின்றன என அவர் தெரிவித்தார்.