“ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் வழக்கை விரைவாக நடத்தி, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர உத்தரவிட்டுள்ளேன்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் வழக்கை விரைவாக நடத்தி, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர உத்தரவிட்டுள்ளேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சென்னை பெரம்பூர் பகுதியில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர்…

ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் வழக்கை விரைவாக நடத்தி, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர உத்தரவிட்டுள்ளேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சென்னை பெரம்பூர் பகுதியில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், அவர் வீட்டருகே ஆதரவாளர்களுடன் நின்ற போது, திடீரென இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் அவரை சூழ்ந்துள்ளது. இதையடுத்து, அந்த மர்ம கும்பலானது, ஆம்ஸ்ட்ராங்கை அரிவாளால் வெட்டி தாக்கியுள்ளனர். இதனால், சம்பவ இடத்திலேயே ஆம்ஸ்ட்ராங் நிலை குலைந்து கீழே விழுந்துள்ளார். பின்னர், அந்த கும்பலானது நிகழ்விடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளனர்.

இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்துள்ளார். இந்நிகழ்வு குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், உடனடியாக நிகழ்விடத்திற்கு வந்து விசாரணையில் ஈடுபட்டனர். தனியார் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ராஜீவ் காந்தி
மருத்துவமனைக்கு ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டுவரப்பட்டது

இதைத் தொடர்ந்து கொலையாளிகளை  பிடிக்க 5 தனி பிரிவு அமைக்கப்பட்டு காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.  கொலையாளிகள் பயன்படுத்திய பட்டா கத்தியை சம்பவ இடத்தில் கிடந்த நிலையில்  அதனைக் கைப்பற்றி தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் சில மாதங்களுக்கு முன்பு ஆற்காடு சுரேஷ்
என்பவர்  படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஆம்ஸ்ட்ராங் பின்னிருந்து
செயல்பட்டார் என்றும் எனவே அவரது சகோதரர்  கூலிப்படையை ஏவி இவரை கொலை செய்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகப்பட்டு விசாரணை மேற்கொண்டனர்

சம்பவத்தில் தொடர்புடைய ஆற்காட்டு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்ளிட்ட 8 பேர், சென்னை அண்ணா நகர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.  படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த பகுஜன் சமாஜ் கட்சியில் தேசியத் தலைவர் மாயாவதி சென்னை வர உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது..

“ பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர்  ஆம்ஸ்ட்ராங்  படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியையும் பெரும் வருத்தத்தையும் அளிக்கிறது. கொலையில் சம்பந்தப்பட்டவர்களைக் காவல்துறை இரவோடு இரவாகக் கைது செய்திருக்கிறது.  ஆம்ஸ்ட்ராங்கை இழந்து வாடும் அவரது கட்சியினர், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, வழக்கை விரைவாக நடத்தி, குற்றவாளிகளுக்குச் சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத்தரக் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.