சிவகார்த்திகேயன், சாய்பல்லவி இணைந்து நடித்துள்ள அமரன் திரைப்படம் உருவான விதம் தொடர்பாக படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘அமரன்’. கமல்ஹாசனின் ராஜ்கமல் புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். இப்படத்திற்கு நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.
உண்மைக்கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படம், தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்துள்ளார். இப்படத்தின் முதல் பாடலான ‘ஹே மின்னலே’ பாடலும், இரண்டாவது பாடலான ‘வெண்ணிலவு சாரல்’ பாடலும் சமீபத்தில் வெளியாகி அனைவரது மனதையும் கவர்ந்தது. தற்போது வரை இந்த இரண்டு பாடல்களும் இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளது. இப்பாடல்கள் ஏற்படுத்திய தாக்கத்தாலேயே பலரும் படத்தை பார்க்க ஆர்வமாக இருந்தனர். இந்த நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி கவனம் பெற்றது.

இதனிடையே, இப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும், 2 மணி 48 நிமிடங்கள் கால அளவு கொண்ட திரைப்படமாக உருவாகியுள்ளதையும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சூழலில், ‘அமரன்’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சி டெல்லியில் ராணுவ வீரர்களுக்காக திரையிடப்பட்டது. அவர்களிடமிருந்து மிகுந்த பாராட்டுகளைப் பெற்றதாக கூறப்படுகிறது. இந்தத் திரையிடல் நிகழ்ச்சியில் நடிகை சாய் பல்லவி, நடிகர் சிவகார்த்திகேயன் பங்கேற்றனர்.
திரைப்படத்தின் மீதுள்ள எதிர்ப்பார்ப்பு நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. திரைப்படம் வெளியாக இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் திரைப்படம் உருவான விதம் குறித்தும் அதற்கு ஒவ்வொரு கதாப்பாத்திரம் தங்களை பயிற்சி செய்த விதத்தை பற்றியும் படக்குழு வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதன்படி, நேற்று முனதினம் முதல் அத்தியாயத்தை வெளியிட்டிருந்த நிலையில், நேற்று 2வது அத்தியாயத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.







