டாக்ஸிக் படம் எப்படி? – கேஜிஎப் மாதிரி இருக்கிறதா?

யாஷ் நடிப்பில் வெளியான டாக்ஸிக் படத்தின் திரை விமர்சனத்தை காணலாம்.

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மினி வசந்த், ஹூமா குரேஷி, தாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் இன்று உலகம் முழுக்க பல்வேறு மொழிகளில் வெளியாகியிருக்கும் பெரிய பட்ஜெட் படம் ‘டாக்ஸிக்’. இந்தப் படத்தின் கதை என்ன? என்ன சொல்ல வருகிறார் இயக்குநர் கீது மோகன்தாஸ்? யஷ், நயன்தாரா உள்ளிட்டோரின் நடிப்பு எப்படி? இதோ விமர்சனம்.

கோவாவில் போதை மருந்து கடத்தல் பிசினஸ், ஹார்பர் கன்ட்ரோல், அடிதடி, வெட்டுக்குத்து விஷயத்தில் பவராக இருக்கிறார் யஷ். அவருக்குப் பக்கபலமாக இருக்கிறார் அக்கா நயன்தாரா. யஷின் திறமையைப் பார்த்து, தனது மகள் தாராவை அவருக்குத் திருமணம் செய்து வைக்க ஆசைப்படுகிறார் அந்த ஊரில் உள்ள பெரிய டான். அதேசமயம், ‘என் மகள் கண்ணில் இருந்து கண்ணீர் வந்தால் ரத்த ஆறு ஓடும்’ என எச்சரிக்கிறார். திருமண ஏற்பாடுகள் நடக்கும்போது, அந்த ஊருக்கு சர்க்கஸ் நடத்த வரும் கியாரா அத்வானியிடம் மனதைப் பறிகொடுக்கிறார் யஷ். கியாரா அத்வானி கர்ப்பமாகிறார். அந்தக் காதலுக்கு நயன்தாராவும் ஆதரவு கொடுக்க, தன் மகளின் வாழ்க்கையை நினைத்து டான் கொதிக்க, அடுத்து சில அதிரடி சண்டைகள் நடக்கின்றன. அது என்ன? யஷ், கியாரா அத்வானி திருமணம் நடந்ததா? நயன்தாராவுக்கு, டானுக்கு என்ன ஆனது என்பது முதல் பாதி. அடுத்த பாதியில் சற்றே நடுத்தர வயதில் இருக்கும் யஷ்க்கும், கியாரா அத்வானி மூலமாகப் பிறந்த இன்னொரு யஷ்க்கும் மோதல் வருகிறது. அதில் ஜெயித்தது யார்? யஷ், ருக்மினி வசந்துக்குப் பிறந்த பையனுக்கு என்ன ஆனது என்பதைப் படு ஆக்‌ஷன், வன்முறை கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

டாக்ஸிக் படத்தின் முக்கியமான விஷயம் அக்கா, தம்பி பாசம், அப்பா, மகன் மோதல், அப்புறம் கொஞ்சம் காதல். இதை வன்முறை, பழிவாங்கல், ரத்தம் கலந்து பக்கா ஆக்‌ஷன் படமாகக் கொடுத்திருக்கிறார்கள். ஆரம்பம் முதல் கடைசி வரை சண்டை போட்டுக்கொண்டே இருக்கிறார்கள். ஹீரோ வில்லன்களை, அவரது ஆட்களைக் கொடூரமாகக் கொன்றுகொண்டே இருக்கிறார். குறைந்தபட்சம் ஆயிரத்துக்கும் அதிகமானவர்களைக் கொன்றிருப்பார். அதற்கு ஒரு ஃப்ளாஷ்பேக் சொல்கிறார்கள். யஷ், நயன்தாராவின் அம்மாவின் தவறான செயல், சில விஷயங்களால் இவர்கள் இப்படி ஆகிறார்கள். யாருக்கும் அடங்க மறுக்கிறார் யஷ். அவருக்குக் காதல் வர என்ன நடக்கிறது. அவருடைய மகன் கோபத்தால் என்ன நடக்கிறது என்பதை கேஜிஎஃப்-ஐ விடப் படு பயங்கரமான சண்டை, வன்முறை பின்னணியில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் கீது.

முதலில் பக்கா ஸ்டைலான இளமையான தோற்றத்தில் வருகிறார் யஷ். அவரது கோபம், அந்த உடல்மொழி, ஆக்‌ஷன், காதல் காட்சிகள் பக்கா ஹீரோயிசம். அதற்கு ஏற்ப டயலாக் டெலிவரியும் பக்கா. என்ன, அதில் கேஜிஎஃப் சாயல் தெரிகிறது. குறிப்பாக, சண்டைக்காட்சியில் புகுந்து விளையாடியிருக்கிறார். ஆக்‌ஷன் பிரியர்கள் கொண்டாடுவார்கள். இடைவேளைக்குப் பின் நடுத்தர வயது கேரக்டரில் டானாக, கோபக்காரராக வருகிறார். அந்த கேரக்டர் நடிப்பைக் கொட்டுகிறார். அவரது இளம் வயது மகனாக வரும் யஷ் இன்னொரு முகத்தைக் காண்பிக்கிறார். அது டெரராக இருக்கிறது. முதல் பாதியில் இருந்த ஹீரோயிசம், அடுத்த பாதியில் ஓவர் டோஸாக மாறுகிறது. கிளைமாக்ஸ், அதற்கு முந்தைய ஒரு மணி நேரப் படத்தில் யஷ், அவரது நடிப்பு, கத்தல் கொஞ்சம் தலைவலியை ஏற்படுத்துகிறது. அந்த இடத்தில் மனநல பாதிப்பு மாதிரியான ஒரு விஷயம் வருகிறது. அது புதுமை என்றாலும், ரொம்பவே ஓவர் டோஸ்.

ஹீரோயின்களில் கியாரா அத்வானி அழகு சிலையாக வருகிறார். அவர் சம்பந்தப்பட்ட காதல், பாடல், எமோஷனல் காட்சிகள் செம. இன்னொரு ஹீரோயினாக வரும் ருக்மினியும் கவர்கிறார். வில்லியாக வந்து மிரட்டியிருக்கிறார் ஹூமா குரேஷி. யஷ் காதலியாக வரும் தாராவுக்கும் நல்ல கேரக்டர். இவர்களை விட, யஷ் அக்காவாக வரும் நயன்தாராவுக்கு அழுத்தமான ரோல். அவரது கெட்அப், உடை, நடை, ஆக்‌ஷன் மிரட்டுகிறது. ஆக்‌ஷன், தாதா கதை என்பதால் நயன்தாரா தம் அடிக்கிறார், சரக்கு அடிக்கிறார். இதெல்லாம் ரொம்பப் புதுசு. இடைவேளைக்கு முந்தைய காட்சிகளில் நயன்தாரா நடிப்பு, சண்டை படத்துக்குப் பெரிய பிளஸ். இவர்களைத் தவிர ஏகப்பட்ட வில்லன், டான், தாதா வந்து செத்துக்கொண்டே இருக்கிறார்கள்.

ராஜீவ் ரவி ஒளிப்பதிவு, ரவி பஸ்ரூர் இசை படத்தை 1947 கோவாவுக்குக் கொண்டு செல்கிறது. அதேபோல் ஆர்ட்வொர்க், கிராபிக்ஸ் அருமை. ஆனால், சவுண்ட் காதைப் பிளக்கிறது. சண்டைக்காட்சிகள்தான் பெரும்பகுதி படத்தை ஆக்கிரமிக்கின்றன. அதை ராவாக, பல சமயம் பயந்து கண்களை மூடிக்கொள்ளும் அளவுக்கு அதிரடியாகக் கொடுத்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட சண்டைக்காட்சிகள் படத்துக்கு மைனஸாகவும் இருக்கின்றன. வக்கிரமான சண்டையை, ரத்தத்தை, கொலையை ரசிக்காதவர்கள் தெறித்து ஓடுவார்கள். அந்த அளவுக்கு படம் முழுக்க வயலன்ஸ். சர்க்கஸ் கூடார சண்டை, பெண்கள் சண்டை, பழிவாங்கல் சீன்களில் ஃபைட் மாஸ்டர் ஜே.ஜே. பெர்ரியின் உழைப்பு தெறிக்கிறது. அதேசமயம், அளவுக்கு அதிகமான வயலன்ஸ் படத்தின் மைனஸ்.

அதேபோல், ஒவ்வொரு கேரக்டரின் பின்னணியும் ரொம்பவே வன்முறைத் தனம் மிக்கதாக, வக்கிரம் பிடித்ததாக, மனிதநேயம் இல்லாததாகக் காண்பிக்கப்படுகிறது. தாதா கதை என்பதால் எங்கும் ரத்த ஆறு, பழிவாங்கல். அதிலும் 2-வது பாதியில் அந்தப் பாதிப்பு ஓவரோ ஓவர். ஒரு அப்பாவும், மகனும் இந்த அளவுக்கு வெறியுடன் நடந்துகொள்வார்களா? என்ற சந்தேகம் வருகிறது. படத்தின் நீளமும் 3.15 மணி நேரம் என்பதால் ஒரு கட்டத்தில் போரடிக்க ஆரம்பித்துவிடுகிறது. கேஜிஎஃப், கேஜிஎஃப் 2 படங்களில் கதை இருந்தது. சில கமர்ஷியல் விஷயங்கள், ஹீரோயிசம் இருந்தது. இதில் அதெல்லாம் மிஸ்ஸிங். கோபமும், வன்முறையும், பழிவாங்கலும் தான் அதிகம் இருக்கிறது. கொஞ்சம் இளகிய மனதுடையவர்கள் பார்த்தால் பதறிவிடுவார்கள். படம் பார்வையாளர்களுடன் கனெக்ட் ஆகவில்லை. எங்கேயும் கைதட்டி, விசில் அடித்து, சிரித்து, அழுது ரசிக்க முடியவில்லை. ஒரு நல்ல சினிமா காதுக்கும், கண்களுக்கும் விருந்து அளிக்க வேண்டும். ஆனால், இதில் கத்திக்கொண்டே இருக்கிறார்கள். ரத்தம் தெறித்துக்கொண்டே இருப்பதால் கண்களை அடிக்கடி மூட வேண்டிய நிலை. பெரிய பட்ஜெட், பெரிய நடிகர்கள் இருந்தும் கதை, திரைக்கதை, கதையை நகர்த்திச் சென்ற விதத்தில் சொதப்பியிருக்கிறார் இயக்குநர் கீது மோகன்தாஸ். படத்தின் கதை உள்ளிட்ட விஷயங்களில் யஷ் பங்கும் இருக்கிறது. எப்படா படம் முடியும் என்று தவிக்கவிடுகிறார்கள்.

மீனாட்சி சுந்தரம், சிறப்பு செய்தியாளர்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.